மின்னூலாக வாங்க:
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
டிஎன்பிஎஸ்சி தொகுதி (4)
திருக்குறள்: 19 அதிகாரங்கள் மட்டும்.
ஆக்கம்: ப. சரவணமணிகண்டன்.
வெளியீடு: தொடுகை பதிப்பகம்.
உள்ளே
இல்லறவியல்: 11. செய்நன்றி அறிதல்
அரசியல்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
அறத்துப்பால்:
இல்லறவியல் 08. அன்புடைமை
71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
பொருள்: ஒருவர் மீதான நம்முடைய அன்பை எத்தனை திட்டமிட்டு மறைத்துவைத்தாலும், அவர்களுக்குத் துன்பம் ஒன்று நேரிடும்போது, நம் கண்கள் நம்மை மீறியும் கண்ணீர் சிந்தி அவர்மீதான நமது அன்பை அம்பலப்படுத்திவிடும்.
துன்பமான மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக புன்கணீர் என வள்ளுவர் கூறினாலும், கண்களை ஒத்த நம் அன்பிற்குரியவர்களை நெடுநாளைக்குப் பின் சந்திக்க நேர்ந்தால், நம் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியும் என்கிற பாவாணரின் விளக்கமும் சுவையானது.
தொடை: பொழிப்பு மோனை, அடி எதுகை.
72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்: உள்ளத்தில் அன்பில்லாதவர்கள், எல்லாப் பொருட்களையும் தமதாக்கிக்கொண்டு வாழ்வார்கள். அன்புடையவர்கள், தமது உடலையும் பிறருக்காக வழங்கும் இயல்புடையவர்களாகத் திகழ்வார்கள்.
என்பு என்ற சொல் எலும்பைக் குறித்தாலும், இங்கு உடலைக் குறித்து வந்துள்ளதால், இது சினை ஆகுபெயர்.
தொடை: ஒருவு மோனை, அடி எதுகை.
73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
பொருள்: உயிருக்கு உடலோடு இருக்கிற தொடர்பால் பெற்றதே நம் வாழ்வு. எனவே அதன் உண்மையான பயன் என்பது, அன்போடு இணைந்த செயலாக அமைதல் வேண்டும் என்கிற கலைஞரின் விளக்கம் நுட்பமும் எளிமையும் இனிமையும் கொண்டது.
தொடை: அடி எதுகை, அடி இயைபு.
74. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
பொருள்: உறவினரிடம் நாம் காட்டும் அன்பின் நீட்சியாய், நாம் எல்லோரிடத்திலும் அன்பு செய்யத் தொடங்கிவிடுவோம். இத்தகைய வழக்கத்தைக் கைக்கொண்டால், நாம் தேடிச் செல்லாமலேயே நமக்கு நட்புகள் அமையும். அந்த நட்புகளின் மூலமாக நாம் விரும்பியவற்றை அடைய இயலும்.
நாடாச் சிறப்பு என்ற சொல்லுக்கு, வருந்தித் தேடாமல் நாம் அடையும் சிறப்பு என்கிற பாவாணரின் விளக்கம் மிகப் பொருத்தமானது.
நண்பு: நட்பு என்பதன் இடைப்போலி,
நாடாச் சிறப்பு: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
தொடை: ஒருவு இயைபு.
75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
பொருள்: உலகில் சிறப்போடும் புகழோடும் வாழ்ந்தவர்கள் யார் எனில், அவர்கள் தங்கள் அன்றாடத்தை அன்பால் நிறைத்துக்கொண்டவர்களே.
தொடை: இணைமோனை, அடி எதுகை.
76. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
பொருள்: கொடை முதலான அறச்செயல்களுக்கே அன்பு துணையானது என்று சொல்பவர்கள், போர் முதலான வீரச்செயல்களுக்கும் அதுவே துணை என்பதை அறிய மாட்டார்கள்.
அறியார்: வினையால் அணையும் பெயர்.
தொடை: கீழ்க்கதுவாய் மோனை, அடி எதுகை.
77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
பொருள்: எலும்பில்லாத உடல்கொண்ட பூச்சி புழுக்களை வெயில் சுட்டெரிக்கும். அதுபோல அன்பில்லாத உயிர்களை அறம் பொசுக்கும்.
உவம உறுபு வெளிப்படாததால், இக்குறளில் வந்துள்ளது எடுத்துக்காட்டு உவமையணியாகும்.
தொடை: அடி எதுகை.
78. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
பொருள்: உள்ளத்தில் அன்பில்லாத உயிர்களின் அன்றாடம் என்பது, பாலைவனத்தில் பட்டுப்போன மரம் ஒன்று தளிர்த்ததற்குச் சமமானது. அதாவது, பட்டமரம் தளிர்க்காது, அன்பில்லாத வாழ்வும் சிறப்பேதும் அடையாமல் கெட்டழியும்.
அற்று என்கிற உவம உறுபு வெளிப்படையாகத் தோன்றியுள்ளதால், குறளில் பயின்றுள்ளது உவமை அணியாகும். வன்பாற்கண் என்ற சொல் வன்மையான பாலையிடத்தில் என்ற பொருள் தரும். கண் ஏழாம் வேற்றுமை உறுபு என்பதை நினைவில் கொள்ளவும்.
தொடை: ஒருவு எதுகை.
79. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
பொருள்: கண்ணுக்குப் புலப்படாத அகத்தின் உறுப்பாகிய அன்பு இல்லாவிட்டால், காண்பதற்குப் புலனாகிற புறத்தின் உறுப்புகளான கை, கால், கண், மூக்கு, செவி, வாய், மெய் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் செயல்களால் என்ன பயன் விளையும்?
இல்லறம் என்கிற அக வாழ்வுக்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவனுக்கு தன் புற வாழ்வின் உறுப்புகளான இடம், பொருள், ஏவல் ஆகியவை எப்படி அவன் விரும்பிய பயன்களை அவனுக்கு வழங்கும்? என இரண்டு வகைகளில் வினாக்கள் எழுப்பிப் பொருள் காணுகிறார்கள். இரண்டுமே பொருத்தமானதும் சுவையானதும்தான்.
தொடை: அடி இயைபு.
80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள்: உயிரோடு கூடிய உடல் என்பது அன்பின் வழிப்பட்டதாகும். அது இல்லாத உயிர்களின் உடல்கள், எலும்புகளைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பே ஆகும். அதாவது பிணத்திற்குச் சமம்.
தொடை: ஒருவு மோனை, அடி எதுகை.
இல்லறவியல்: 10. இனியவை கூறல்
91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பொருள்: அன்பு கலந்த, வஞ்சனையற்ற மெய்ப்பொருள் உணர்ந்த சான்றோரின் சொற்களே இனிய சொற்களாகும்.
ஈரம்-அன்பு, படிறு-வஞ்சனை, செம்பொருள்-மெய்ப்பொருள்.
அளைஇ-சொல்லிசை அளபெடை.
92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
பொருள்: அக மகிழ்வோடு பிறருக்கு ஒன்றைக் கொடுப்பதைக் காட்டிலும், முகமலர்ச்சியோடு இனிய சொற்களைப் பேசுவது சிறந்ததாகும்.
தொடை: ஒருவு இயைபு, ஒருவு எதுகை.
93. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
பொருள்: முகத்தால் இனிமையாகப் பார்த்து, அகத்தில் இனியவை நினைத்து, இனிமையான சொற்களைப் பேசுவதே அறமாகும்.
தொடை: ஒருவு எதுகை.
94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
பொருள்: எவரிடத்திலும் இன்பம் தரக்கூடிய இனிமையான சொற்களைப் பேசுபவர்களுக்குத் துன்பம் தரும் வறுமை எப்போதும் வாராது.
துவ்வாமை-வறுமை;
உறூஉம்: சொல்லிசை அளபெடை.
தொடை: இணை மோனை, அடி இயைபு, அடி எதுகை.
95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பொருள்: தன்னைவிடச் சிறியோரிடத்திலும் பணிவுடைய இன்சொற்களைக் கூறுபவர்களுக்கு அழகு செய்ய பிற அணிகளன்கள் எதுவும் தேவையில்லை.
மற்று: அசைநிலை.
தொடை: அடி எதுகை.
96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
பொருள்: நன்மை தரும் சொற்களை இனிமையுடன் எடுத்துக் கூறினால், தீயவை அழிந்து அறம் பெருகும். அதாவது, நன்மை கருதிச் சொல்பவற்றையும் கடுமையாகச் சொல்லாமல், இனிய சொற்களால் சொல்வதே அறம்.
தொடை: பொழிப்பு மோனை, ஒருவு எதுகை.
97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
பொருள்: பயனை விளைவிக்கக்கூடிய பண்பில் நீங்காத சொல், சொல்பவருக்கும் நன்மை அளிக்க வல்லது.
தொடை: இணை மோனை, ஒருவு இயைபு, ஒருவு எதுகை.
98. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
பொருள்: விளையும் பயனாலும், பொருளாலும், இனிய குரலாளும் சொல்லப்படும் இன்சொல்லானது, அதைச் சொல்பவனுக்கு இந்தப் பிறவியில் மட்டுமல்லாது, அடுத்த பிறவியிலும் இன்பத்தையே ஏற்படுத்தும். சிறப்புக்குரியது என்பதால், மறுமை முதலில் கூறப்பட்டுப் பின் இம்மை கூறப்பட்டது.
தொடை: ஒருவு எதுகை.
99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
பொருள்: பிறர் கூறும் இனிய சொற்களால் தனக்கு இன்பம் விளைவதைக் காணும் ஒருவன், தான் மட்டும் கடுமையான சொற்களைப் பேசுவது எதனாலோ!
தொடை: இணை மோனை, அடி எதுகை.
100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
பொருள்: தனக்கு நன்மையையும், பிறர்க்கு இன்பத்தையும் வழங்கக்கூடிய இன்சொற்கள் தன்னிடம் ஏராளமாய் இருக்க, ஒருவன் கடுஞ்சொற்களைப் பேசுவது, மரத்தில் இருக்கிற கனியை விட்டுவிட்டுக் காயைப் பறித்துண்பதற்கு ஒப்பாகும்.
அற்று என்கிற உவம உறுபு வெளிப்படையாகத் தோன்றுவதால், இது உவமை அணியாகும்.
தொடை: பொழிப்பு மோனை, அடி எதுகை.
இல்லறவியல்: 11. செய்நன்றி அறிதல்
101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
பொருள்: நாம் பிறர்க்கு ஒரு உதவீயும் செய்யாமலிருக்க, அவர் நமக்குச் செய்யும் உதவிக்கு இந்த உலகத்தையும் மேலுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
தொடை: இணை மோனை.
102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
பொருள்: உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி, அதன் முயற்சி மற்றும் பொருளால் சிறியதே ஆனாலும், அது செய்யப்பட்ட நெருக்கடியான காலத்தினை ஆராய்ந்தால், அவ்வுதவி இந்த உலகத்தைவிடவும் உயர்ந்தது.
தொடை: அடி எதுகை.
103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
பொருள்: ஒருவருக்கு இத்தகைய உதவி செய்தால், இவ்வளவ்உ நன்மை பயக்கும் என நினைக்காமல் ஒருவர் செய்த உதவியை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.
தொடை: ஒருவு எதுகை.
104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
பொருள்: ஒருவருக்குச் செய்த உதவியானது தினையளவே ஆனாலும், அதைப் பனையளவாகத் தெரிந்துகொள்வார்கள் அதன் பயனறிந்தவர்கள்.
ஒருவு எதுகை.
105. உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
பொருள்: உதவி என்பது, காரணம், காலம், கைம்மாறு, விளைபயன் ஆகியவற்றால் மட்டும் சிறப்பதில்லை. அந்த உதவியைப் பெறுபவரின் பண்புநலனாலும் அவருக்குச் செய்யப்பட்ட உதவி சிறப்படைகிறது.
தொடை: மேல்க்கதுவாய் இயைபு.
106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
பொருள்: குற்றமற்றவராய் ஒழுக்கத்தில் சிறந்தவரின் உறவை மறக்கக்கூடாது. நமது துன்பத்தில் உடன் இருந்ந்தோரின் உறவை ஒருபோதும் கைவிடக்கூடாது.
தொடை: ஒருவு இயைபு, ஒருவு எதுகை.
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
பொருள்: தாங்கள் அடைந்த துன்பத்தைப் போக்கியவரின் நட்பை தங்களின் ஏழேழு பிறவிகளிலும் பெரியோர் நினைத்துப் போற்றுவர். இது உயர்வு நவிச்சி அணியாகும்.
விழுமம்-துன்பம்.
தொடை: இணை மோனை, இணை எதுகை, அடி எதுகை.
108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
பொருள்: ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறமாகாது. அதேசமயம், அவர் செய்த தீமையை அப்போதே மறந்துவிடுவது நமக்கு நன்மை பயக்கும்.
நன்மையை மறப்பதென்பது, அவருக்குத் தீமை செய்வதையும் குறிக்கும். அதுபோல, தீமையை மறப்பது நமக்கு எவ்வாறு நன்மை தரும் என்றால், அந்தத் தீமையை நாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்தால் திரும்ப நாம் அவருக்கு தீமை செய்வதிலேயே குறிக்கோளாக இருப்போம். அது நமது மனநலத்தை வெகுவாகப் பாதிக்கும்.
தொடை: மேல்க்கதுவாய் மோனை/எதுகை, அடி எதுகை.
109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
பொருள்: ஒருவர் நமக்கு கொலைக்குச் சமமான தீமையைச் செய்கிறார். அவரின் அந்தச் செயலால் நம் மனம் புண்படாமல் இருக்க வேண்டுமானால், முன்பு அவர் நமக்குச் செய்த நன்மை ஒன்றை நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
தொடை: அடி எதுகை.
110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
பொருள்: எத்தகைய அறங்களை அழித்தவர்களுக்கும் உய்வு உண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்து அதற்கு எதிராய் நடந்தவர்க்கு உயவோ மன்னிப்போ கிடையாது. இதே கருத்து புறநானூற்றுப் பாடல் எண் 34லும் கூறப்பட்டுள்ளது.
தொடை: அடி இயைபு.
இல்லறவியல்: 13. அடக்கமுடைமை
121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
பொருள்: எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் அடக்கத்துடன் வாழ்பவர்கள், தேவர் உலகத்தை அடைவார்கள். அவ்வாறு அடக்கத்தைப் பேணாதவர்கள் இருள் சூழ்ந்த நரகத்தைச் சென்று சேர்வார்கள்.
விடும்-விரைவு மற்றும் முடிவை உணர்த்தும் துணைவினைச்சொல்.
தொடை: கீழ்க்கதுவாய் மோனை.
122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங்கு இல்லை உயிர்க்கு.
பொருள்: அடக்கத்தை செல்வமாகப் போற்றிப் பேண வேண்டும். ஏனெனில், நம்முடைய உயிருக்கு அதனினும் உயர்வான செல்வம் இல்லவே இல்லை.
123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
பொருள்: அறிய வேண்டியவற்றை அறிந்து, ஒருவன் தன் நெறியில் அடக்கத்தோடு வாழ்வான் எனில், அது சான்றோரால் அறியப்பட்டு, அவனுக்கு மேலும் புகழ் சேர்க்கும்.
தொடை: ஒருவு இயைபு.
124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
பொருள்: அறிய வேண்டியனவற்றை அறிந்து, தன் நெறியில் பிறழாது, அடக்கத்தோடு வாழ்பவனின் உயரம் மலையைவிடப் பெரியதாகும்.
தொடை: அடி எதுகை.
125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பொருள்: தற்பெருமை இல்லாமல் இருத்தல், அனைவரும் கைக்கொள்ள வேண்டிய பண்புதான். அதிலும், செல்வம் உடையவர்கள் அதனைக் கைக்கொள்வது அவர்களுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய் அமையும்.
ஏனெனில், செல்வம் உடையவர்கள், அனைவராலும் மதிக்கப்படுவார்கள்; நினைத்ததை நடத்திமுடிக்கும் பொருள்வளம் பெற்றிருப்பார்கள்; ஆடம்பரமான அன்றாடம் அவர்களுடையதாக இருக்கும். இத்தகைய சாதகமான சூழல், அவர்களை செருக்குகொள்ளத் தூண்டும் என்கிற பாவாணரின் விளக்கம் ஆழ்ந்த பொருளுடையது.
தொடை: அடி எதுகை.
126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
பொருள்: தனக்கு ஆபத்து நேர்கையில், ஆமை தன் நான்கு கால்கள் மற்றும் தலை என ஐந்து உறுப்புகளையும் ஓட்டிற்குள் உள் இழுத்துக் காத்துக்கொள்வதுபோல், ஒருவன் தன் மெய், வயா,் கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி, நெறிபிறழாது வாழ்வான் எனில், அது அவனுக்கு இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனிவரும் ஏழு பிறவியிலும் காவலாக அமையும்.
ஒருமை, எழுமை, ஐந்து-தொகைக் குறிப்பு.
127. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பொருள்: ஒருவன் எதை அடக்கி ஆளாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும். இல்லையென்றால், அவன் சொற்குற்றத்துக்கு ஆளாகி துன்பப்படுவான்.
சோகாப்பர்-சிறை தண்டனை பெறுவர்.
யா-அஃறினைப் பன்மை வினாப்பெயர் திரிந்தது.
தொடை: பொழிப்பு எதுகை.
128. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
பொருள்: ஒருவன் தன்னுடைய பேச்சில், ஒரே ஒரு தீய சொல்லைச் சொல்வான் என்றாலும், அது அவன் ஏற்கனவே பெற்றிருந்த நன்மதிப்பை இல்லாமல் செய்துவிடும். தீய சொல் என்பது, பொய், புறங்கூறல், கடுஞ்சொல் மற்றும் பயனில்லாச் சொல்.
இந்தக் குறளுக்கு, ஒரு குடம் பாலில் துளி அளவு நஞ்சு கலந்தது என்ற கலைஞரின் சான்று மிகப் பொருத்தமானது.
129. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
பொருள்: நெருப்பு உடம்பில் பட்டு உண்டான புண் விரைவில் ஆறிவிடும். ஆனால், ஒருவன் தன் சொல்லால் பிறரின் உள்ளத்தைச் சுடுவான் என்றால், அது தழும்பாக இறுதிவரை எஞ்சும். வள்ள்உவர் ஆறுவதைப் புண் என்றும், ஆறாத ஒன்றை வடு என்றும் குறிப்பிடுகிறார்.
சுடுதல் என்ற தொழில் நெருப்புக்கும் நாவுக்கும் ஒன்றானது. ஆனால் ஆறும் ஆறாது என்கிற விளைவால் நெருப்பும் நாக்கும் வேறுபட்டு நிற்கின்றன. இது வேற்றுமை அணியாகும்.
130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
பொருள்: கற்றுத் தேர்ந்த ஒருவன், தன் உள்ளத்தில் பிறக்கும் சினத்தை அடக்கி நெறியில் பிறழாது வாழ்வான் என்றால், அவனோடு உரையாட அறக்கடவுள் நேரம் பார்த்துக் காத்திருக்கும்.
கதம்-சினம், செவ்வி-உரையாடும் விருப்பம்.
தொடை: இணை மோனை.
இல்லறவியல்: 14. ஒழுக்கமுடைமை
131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பொருள்: எல்லாவற்றையும்விட உயிரே சிறந்தது. அந்த உயிருக்கே மேன்மை தருவது ஒழுக்கம் என்பதால், அது உயிரைவிட மேலானதாகப் பேணப்படவேண்டும்.
தொடை: ஒருவு இயைபு, கீழ்க்கதுவாய் எதுகை.
132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
பொருள்: பல்வேறு அறங்களை ஆராய்ந்தாலும், மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது ஒழுக்கமே என்பதால், எத்தகைய துன்பத்துக்கு ஆளானாலும் அவ்வொழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும்.
தொடை: ஒருவு இயைபு.
133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
பொருள்: ஒழுக்கம் தவறாது வாழ்பவர்களே உயர் குடியைச் சேர்ந்தவர்கள். ஒழுக்கம் தவறுபவர்கள் தாழ்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
தொடை: ஒருவு எதுகை.
134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
பொருள்: வேதம் அறிந்த பார்ப்பனன் அதை மறந்துவிட்டால் மீண்டும் கற்றுக்கொள்ளமுடியும். ஆனால், அவன் தன் ஒழுக்கத்தில் தவறிவிட்டால், அது அவனது குலப்பெருமையை அழி்த்துவிடும்.
தொடை: அடி எதுகை.
135. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
பொருள்: பொறாமை உடையவனிடத்தில் செல்வம் பெருகாது. அதுபோல, ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு கிடையாது.
உவமையணி.
தொடை: அடி எதுகை.
136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
பொருள்: ஒழுக்கக் குறைபாட்டால் கேடு உண்டாகும் என்பதை அறிந்திருப்பதால், அறிவும் மன உறுதியும் உடையவர்கள் அவ்வொழுக்கத்திலிருந்து தவறமாட்டார்கள்.
உரவோர்-மன உறுதி உடையோர்,
தொடை: இணை மோனை, ஒருவு எதுகை.
137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பொருள்: ஒழுக்கம் உடையவராக இருந்தால் மேன்மை உண்டாகும். ஒழுக்கம் தவறினால், வேண்டாத பழி வந்துசேரும்.
தொடை: ஒருவு எதுகை.
138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
பொருள்: நல்லொழுக்கம் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம் துன்பத்தையே தரும். ஒன்றின் பின்விளைவை மற்றொன்றோடு பொருத்திப் பார்க்கும் பரிமேலழகர், நன்மையான அறச் செயல்களுக்கு நல்லொழுக்கம் வித்தாவதுபோல, தீய செயல்களுக்கு தீயொழுக்கம் வித்தாகும் என்கிறார். அதுபோல, தீய ஒழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும் என்பதால், நல்லொழுக்கம் நிலையான இன்பத்தையும் அளிக்கும் என இடம் மாற்றிப் பொருள்கொள்ளும் அவரின் நுட்பமும் ரசனைக்குரியது.
தொடை: பொழிப்பு மோனை, அடி எதுகை.
139. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
பொருள்: தவறியும்கூட தீய சொற்களைப் பேசுவது, ஒழுக்கம் உடையவர்களுக்கு இயலாத செயலாகும்.
தொடை: பொழிப்பு மோனை, அடி எதுகை.
140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
பொருள்: ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கு ஒவ்வாதனவற்றைக் களைந்து, புதியனவற்றை ஏற்கும் திறம் அறிந்தோர் ஒழுக்கம் நிறைந்த சான்றோர். அவர்களைப் பின்பற்றி நடக்காதவர்கள், பல நூல்களைக் கற்றிருந்தும் அறிவில்லாதவர்களே.
ஏனெனில், கல்வியின் பயன் அறிவு; அறிவின் பயன் ஒழுக்கமாக அமைதல் வேண்டும்.
இல்லறவியல்: 16. பொறையுடைமை
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பொருள்: தன்னைத் தோண்டுபவரையும் விழாமல் காக்கின்ற நிலத்தைப் போல, சொல்லாலும் செயலாலும் தம்மை இகழ்பவரைப் பொறுத்தலே தலையான அறமாகும்.
உவமையணி.
தொடை: அடி எதுகை.
152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
பொருள்: நெறி கடந்து பேசுவதும், செயல்படுவதும் இறப்பு எனப்படுகிறது. அத்தகைய தீமைகளைப் பொறுத்தல் சிறப்பாகும். பொறுத்துக்கொண்டே இருப்பதால் அது நம்மை அறியாமலேயே நம் மனதில் ஆழப் பதிந்துவிடக்கூடும். எனவே, பொறுத்தலைவிட அவற்றை மறத்தலே மேலும் நன்மை பயக்கும்.
தொடை: அடி இயைபு, அடி எதுகை.
153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
பொருள்: விருந்தினரைப் போற்ற இயலாத நிலையே மிகக் கொடுமையான வறுமையாகும். அதுபோல, அறிவற்றவர்களின் தீய செயல்களைப் பொறுத்தல் வலிமைக்கே வலிமை சேர்ப்பதாகும்.
இன்மை-வறுமை.
எடுத்துக்காட்டு உவமையணி.
தொடை: இணை மோனை, கீழ்க்கதுவாய் எதுகை, அடி எதுகை.
154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
பொருள்: சான்றாண்மை என்னும் பண்பு தன்னிடத்திலிருந்து நீங்காமல் இருக்க வேண்டுமானால், ஒருவன் பொறுமையை எப்போதும் கைக்கொள்ள வேண்டும்.
தொடை: ஒருவு இயைபு, ஒருவு எதுகை.
155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
பொருள்: தமக்குத் தீங்கு செய்தோரை தண்டிப்பவர்களை இந்த உலகம் ஒரு பொருட்டாக மதியாது. ஆனால், அத்தீங்கினைப் பொறுத்துக்கொண்டவர்களை பொன்னைப்போல மதித்துத் தன் நினைவில் பொதிந்து வைக்கும்.
தொடை: இணை மோனை, அடி எதுகை.
156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
பொருள்: தமக்குத் தீங்கு செய்தவரை தண்டித்தவர்கள், அந்த ஒருநாளில் மட்டுமே இன்பம் அடைவார்கள். ஆனால், அத்தீங்கினை பொறுத்துக்கொண்டவர்களின் புகழோ இந்த உலகம் அழியும்வரை நிலைத்திருக்கும்.
தொடை: இணை மோனை, ஒருவு இயைபு, ஒருவு எதுகை.
157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
பொருள்: நமக்குப் பிறர் செய்யும் மிகக் கொடிய தீமைகளால் துன்பம் நேரிடும். அத்துன்பத்தை எண்ணியெண்ணி மனம் நொந்து, நாமும் அவருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பது நல்லது.
தொடை: அடி இயைபு, அடி எதுகை.
158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
பொருள்: ஒருவன் செல்வ மிகுதியாலோ, செருக்கின் பெருக்கத்தாலோ நமக்கு தீமை செய்தால், அதை நாம் நம் பொறுமையால் வென்றுவிட வேண்டும்.
விடல்-வியங்கோள் வினை.
தொடை: இணை மோனை, அடி இயைபு, அடி எதுகை.
159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
பொருள்: வரம்பு கடந்து பேசுவோரின் துன்பம் தரும் சொற்களைப் பொறுத்துக்கொள்பவர், இல்லற நெறியில் வாழ்ந்தாலும், துறவு மேற்கொண்டவர்களைவிடவும் தூய்மையானவரே!
தொடை: ஒருவு எதுகை.
160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
பொருள்: உணவு உண்ணாமல் நோன்பிருக்கும் துறவிகள் பெரியவர்கள். ஆனால், அவர்கள்கூட, பிறரின் துன்பச் சொற்களைப் பொறுத்துக்கொள்பவருக்கு அடுத்த நிலையிலேயே வைக்கப்படுவார்கள்.
இல்லறவியல்: 22. ஒப்புரவறிதல்
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
பொருள்: உதவி என்பது எவ்விதக் கைம்மாறையும் எதிர்பார்த்துச் செய்யப்படுவதில்லை. உலகைக் குளிர்விக்கின்ற மழைக்கு யார்தான் கைம்மாறு செய்ய இயலும்?
212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள்: தேவைப்படுவோருக்குக் கொடுப்பதற்காகவே, முயன்று உழைத்து செல்வம் ஈட்டப்படுகிறது.
தொடை: அடி எதுகை.
213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
பொருள்: பிறர்க்கு உதவுதல் என்னும் அறத்தைத் தேவர் உலகத்தில் காண முடியாது. நாம் வாழும் இவ்வுலகில் அது அரிதானது. அதாவது, தேவர் உலகமான விண்ணுலகில் கொடுப்பாரும் கேட்பாரும் இல்லாமல், அனைவரும் சமமான நிலையில் இருப்பார்கள். இந்த உலகத்திலோ, பிறர்க்குத் தனது உழைப்பால் வந்த செல்வத்தைக் கொடுத்து வாழ்பவர்கள் ஒப்புநோக்க மிகச் சிலரே.
124. ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
பொருள்: பிறருக்குத் தனது உழைப்பால் வந்த செல்வத்தைக் கொடுத்து வாழ்பவன், உயிரோடு இருப்பவன் என மதிக்கப்படுவான். அவ்வாறு இல்லாதவர்கள் பிணம் என்றே கருதப்படுவர். உயிருக்குப் பண்பாகிய அறிவோ செயலோ இல்லாததால் அவர்கள் நடைபிணம் என்றுகூடக் கருதப்படுவதில்லை.
தொடை: அடி எதுகை.
215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
பொருள்: உலகத்தின் நல்வாழ்வுக்காக ஒப்புரவாளர்களால் வழங்கப்படும் செல்வமானது, மக்கள் தங்கள் குடிநீருக்காய் பயன்படுத்தும் ஊருணி நீர் நிறைந்தது போன்றதாகும்.
உவமை அணி:
216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
பொருள்: எல்லோராலும் விரும்பப்படும் ஒப்புரவாளன் பெறும் செல்வம், ஊரின் நடுவே கனிகள் மிகுதியாகத் தரும் மரம் இருப்பதைப் போன்று பொதுவானது.
உவமையணி.
தொடை: பொழிப்பு மோனை, அடி எதுகை.
217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
பொருள்: பண்பாளர்களிடம் சேரும் செல்வமானது, வேர் முதல் கொழுந்துவரை ஒவ்வொரு உறுப்பும் மருந்தாகிப் பயன்படும் மரத்தைப் போன்றது.
உவமையணி.
தொடை: பொழிப்பு மோனை, அடி எதுகை.
218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
பொருள்: ஒப்புரவென்னும் கடமையை உணர்ந்த சான்றோர், தன்னிடம் செல்வம் சுருங்கிய காலத்தும் பிறருக்குக் கொடுப்பதை நிறுத்தமாட்டார்கள்.
தொடை: அடி எதுகை.
219. நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
பொருள்: பிறர்க்கு உதவும் ஒப்புரவாளர் வறுமை அடைந்தார் என்பதை அவர் பிறர்க்கு உதவ இயலாத தன் நிலைகுறித்து வருந்தும்போதே அறியலாம்.
தொடை: இணை மோனை.
220. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
பொருள்: பிறருக்கு உதவுவதனால் தனக்குக் கேடு நேரும் என்றால், அந்தக் கேட்டினைத் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ள வேண்டும். அதாவது பிறர்க்குதவும் தன்மையால் ஒருவன் வறுமையுற்று வீழ்ந்தால், அது வீழ்ச்சி இல்லை புகழ் என்பது பொருளாகும்.
துறவறவியல்: 30. வாய்மை
291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
பொருள்: எவருக்கும் எவ்வகையிலும் தீங்கு இழைக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை எனப்படும். அதாவது உள்ளதை உள்ளவாறு உரைத்தலைவிட பிறரின் நன்மை தீமை ஆராய்ந்து சொல்லப்படுவதே நன்று எனப் பொருள்படும்.
292. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
பொருள்: குற்றமற்ற நன்மையை ஒருவருக்கு உண்டாக்கும் என்றால், பொய்யே ஆனாலும் அதைச் சொல்லலாம்; அது மெய் என்றே கருதப்படும். சான்றாக, நாளுக்குநாள் மோசமடைந்துவரும் நோயின் தன்மை குறித்து நோயாளியிடம் உள்ளதை உள்ளவாறு சொல்ல வேண்டியதில்லை. சில நேர்மறையான சொற்களை அவை பொய்தான் என்றபோதும் சொல்லி அவரைத் தேற்றலாம்.
தொடை: இணை எதுகை.
293. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொருள்: தன் மனதுக்குப் பொய் என்று தெரிந்தால் அதை பேசக்கூடாது. அப்படிப் பேசிவிட்டால், நமது மனமே நம்மை வாட்டிவறுத்தும்.
தொடை: அடி மோனை, அடி எதுகை.
294. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
பொருள்: எண்ணத்தால்கூட பொய் நினைக்காத ஒருவரை, உலக மக்கள் தங்கள் உள்ளத்தில் உயந்த இடத்தில் வைத்துப் போற்றுவர்.
தொடை: ஒருவு மோனை, அடி மோனை, அடி எதுகை.
295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
பொருள்: உதட்டளவில் அல்லாமல், மனதளவிலும் உண்மையையே கைக்கொள்பவன், தவத்தையும் தானத்தையும் மேற்கொள்ளும் சான்றோரைவிடச் சிறந்தவன்.
தொடை: ஒருவு இயைபு.
296. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
பொருள்: ஒருவன் மனதாலும் பொய் கூறாதவன் என்றால், அவன் பிற அறங்களை முயற்சி செய்து தேட வேண்டியதில்லை. அது அவனுக்கு தானே கிட்டும்.
தொடை: ஒருவு இயைபு, ஒருவு எதுகை.
297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
பொருள்: பொய்யாமை என்கிற கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிப்பவர்கள், பிற அறம்சார் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதும் நல்லதாகும். அதாவது, அறச்செயல்கள் பல. ஒன்றை மேற்கொண்டு இன்னொன்றை மறக்க வாய்ப்பிருப்பதால், பொய்யாமை என்கிற ஒற்றை அறம் போதும் என்கிறார் வள்ளுவர்.
தொடை: இணை மோனை/எதுகை/இயைபு, அடி இயைபு, அடி எதுகை.
298. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
பொருள்: உடலின் தூய்மை நீரால் உண்டாகும். அகத்தின் தூய்மை வாய்மையாலே உண்டாகும்.
எடுத்துக்காட்டு உவமையணி.
தொடை: ஒருவு இயைபு.
299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
பொருள்: உலகின் புற இருள் அகற்றும் விளக்குகளைவிட, அக இருள் என்கிற அறியாமை அகற்றும் பொய்யாமை விளக்குதான் சான்றோருக்கானது.
300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
பொருள்: மெய் என்று சொல்லப்பட்ட அறங்களுள் வாய்மையைவிடச் சிறந்தது வேறொன்றும் இல்லை.
பொருட்பால்
அரசியல்: 40. கல்வி
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள்: கற்க வேண்டியனவற்றைத் தெளிவுடன் கற்று, கற்றவற்றைத் தன் வாழ்விலும் கடைபிடித்து, அதன்படி வாழ்தல் வேண்டும். கற்க என்பதை பொதுக்கல்வி, சிறப்புக்கல்வி என வகைப்படுத்தும் பாவாணர், ஒருவன் தன் உளப்பான்மைக்கும், உடல்நிலைக்கும், அக இயல்புக்கும் ஏற்ற கல்வியைக் கற்க வேண்டும் என்று சொல்லும் விளக்கம் ஆழ்ந்த பொருளுடையது.
தொடை: முற்றுமோனை, மேல்க்கதுவாய் எதுகை, அடி இயைபு, அடி எதுகை.
392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
பொருள்: எழுத்துகளையும், எண்களையும் பிழையறக் கற்க வேண்டும். ஏனெனில், அதுவே மனிதனுக்குக் கண்கள் எனப்படும்.
எழுத்துகளை கலை என்றும், எண்களை அறிவியல் என்றும் வகைப்படுத்தியிருக்கிற சாலமன் பாப்பையா அவர்களின் உரையும் சுவையானது.
தொடை: பொழிப்பு மோனை, பொழிப்பு இயைபு, அடி இயைபு, அடி எதுகை.
393. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
பொருள்: கற்றவரே கண் உடையவர். கல்லாதவர் பெற்றிருப்பது கண்கள் அல்ல, அவை முகத்தில் இருக்கும் இரண்டு புண்கள்.
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவர் எனில் கண்ணுடையவர் என்றே கருதப்படுவார் என்கிற கலைஞரின் உரையும் போற்றத்தக்கது.
தொடை: பொழிப்பு மோனை, அடி இயைபு, அடி எதுகை.
394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
பொருள்: அனைவரும் மகிழும்படி கூடிப் பேசுதலும், பிரிய நேர்ந்தபோது, “இனி இவரை எப்போது காண்போமோ?” என வருந்துமாறு பழகுவதே கற்றாருடைய செயல்.
தொடை: பொழிப்பு மோனை.
395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
பொருள்: செல்வம் உடையவர்களின் முன்னால், வறியவர்கள் பணிந்து நின்று இரவல் கேட்பதுபோல, கற்றறிந்த ஆசிரியரிடம் பணிந்து கற்க வேண்டும். அப்படிக் கல்லாதவர்கள் மதிக்கப்பட மாட்டார்கள்.
தொடை: அடி எதுகை.
396. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
பொருள்: நீர்ப்பாங்கான இடத்தில் தோண்டுமளவு நீர் ஊறும். அதுபோல, நூல்களைப் படிக்கப் படிக்க அறிவு வளரும்.
எடுத்துக்காட்டு உவமையணி.
தொடை: அடி இயைபு.
397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
பொருள்: கற்றவரை எல்லா ஊர்களும், எல்லா நாடுகளும் அழைத்துச் சிறப்பு செய்யும் என்பதை அறிந்தும்கூட, ஒருவன் சாகும்வரை கற்காமல் இருப்பது எதனாலோ?
398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
பொருள்: ஒருவன் ஒரு பிறவியில் பெறும் கல்வியானது, அவனது அடுத்த ஏழு தலைமுறைகளுக்கும் சிறந்த காவலாய் அமையும்.
தொடை: அடி மோனை, அடி எதுகை.
399. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
பொருள்: கற்றறிந்த கல்வியால், தாம் இன்பம் அடைவதுபோல, உலகத்தாரும் இன்பம் அடைவது கண்டு, கற்றோர் மேலும் மேலும் கற்கவே விரும்புவர்.
400. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
பொருள்: கொள்ளையடிக்க இயலாததும், கொடுத்தால் குறையாததுமான செல்வம் கல்வியே ஆகும். அதனைவிடச் சிறந்த செல்வம் வேறில்லை.
அரசியல்: 42. கேள்வி
411. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
பொருள்: காதுகளால் கேட்டறியும் கேள்விச் செல்வமே, ஒருவன் பெற வேண்டிய செல்வங்களுள் முதன்மையானதாகும்.
இந்தக் குறளில், செல்வம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து, செல்வம் என்கிற ஒரே பொருள்ஐக் குறிப்பதால் இது சொற்பொருள் பின்வரு நிலையணி ஆயிற்று.
தொடை: கூழை மோனை, அடி மோனை/எதுகை/இயைபு.
412. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
பொருள்: செவியின் உணவாகிய கருத்துகள் வழங்கப்படாதபோது, சிறிது வயிற்றுக்கும் உணவு தரப்படும். அதாவது, உணவு திகட்டும் நிலை உடையது; அதிகமானால் உடலுக்குத் தீங்கு செய்வது. எனவே அதனைக் குறிப்பிட்ட அளவில்தான் உட்கொள்ள முடியும். ஆனால், செவியால் கேட்கப்படும் கருத்துக்களை எவ்வளவு வேண்டுமானாலும் உள்வாங்கிக்கொள்ளலாம். அது மனதுக்கு நன்மையே பயக்கும்.
அதேசமயம், உடலின் பகுதியாகிய செவி, சோர்ந்துவிடும் தருணங்களில் மட்டுமே உணவு கொடுத்துத் தேற்ற வேண்டும் எனவும் பொருள்கொள்ளலாம்.
413. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
பொருள்: செவிக்கு உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் நிலத்தில் வாழ்பவர்கள் என்றாலும்கூட, வேள்வியால் விளையும் நெய் முதலிய அவியுணவை உண்ணும் வானுலக வாழ் தேவர்களுக்குச் சமமாகப் போற்றப்படுவர்.
தொடை: ஒருவு இயைபு, ஒருவு எதுதை.
414. கற்றிலன் ஆயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
பொருள்: கல்வியறிவு பெறாதவர்கள்கூட கேள்வியறிவினால் தங்களை வளப்படுத்திக்கொள்ளலாம். அது அவர்களுக்குத் தளர்ச்சி வந்தபோது பிடித்துக்கொள்ளும் ஊன்றுகோலாய்த் துணைநிற்கும்.
கற்க வேண்டியவை பொருள்நூல்கள் மற்றும் உறுதி நூல்கள் என வகைப்படுத்தும் பாவாணர், வறுமை, அறியாமை, நோய் மற்றும் இழப்பே ஒருவரின் தளர்ச்சிக்குக் காரணங்கள் என்கிறார்.
ஒற்கம்-தளர்ச்சி.
தொடை: அடி எதுகை.
415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
பொருள்: வழுக்கும் தன்மையுடைய சேற்று நிலத்தில் விழாமல் தாங்கும் ஊன்றுகோல் போன்றது, கற்று ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் சான்றோருடைய வாய்மை அடங்கிய சொற்கள்.
முந்தைய குறளில் கல்லாதவனுக்குக் கற்றோர் சொல் கேட்டலே ஊன்றுகோல் என்று சொன்ன வள்ளுவர், இந்தக் குறளில் பெற்ற கல்வியோடு உயர்ந்த ஒழுக்கமும் உடையவர்களின் வாய்ச்சொற்களே ஊன்றுகோல் என்கிறார்.
இழுக்கல்-வழுக்கலையுடைய சேற்றுநிலம்.
உவமையணி.
தொடை: அடி எதுகை.
416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
பொருள்: எவ்வளவிற்கெவ்வளவு அறம்சார் கருத்துகளைக் கேட்டு உள்வாங்குகிறோமோ அவ்வளவிற்கவ்வளவு அது பயன்தரும்.
எனைத்து அனைத்து என்பவை பொருள் மற்றும் கால அளவு குறித்தவை.
ஆனும்-ஆயினும் என்பதன் மரூஉ.
தொடை: ஒருவு எதுகை/இயைபு.
417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
பொருள்: கல்வியாலும், கேள்வியாலும் நுட்பமாக ஆராய்ந்து அறியும் தன்மை உடையவர்கள், ஒரு பொருளைத் தவறாகப் புரிந்துகொண்டாலும், அறிவுக்கொவ்வாத தீங்கு பயக்கும் சொற்களைப் பேச மாட்டார்கள்.
தொடை: ஒருவு எதுகை.
418. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
பொருள்: கேள்வியறிவு நிரம்பப்பெறாத காதுகள், அவை துளையுடையவை என்றாலும், கேளாத காதுகளே ஆகும்.
அதாவது, கேள்வியறிவு என்பது கேட்டல் அல்ல, உள்வாங்கல் என்பதைக் குறிக்கும்.
தோட்கப்படாத-துளைக்கப்படாத.
தொடை: கீழ்க்கதுவாய் மோனை, அடி எதுகை.
419. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
பொருள்: நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர்கள் பணிவான சொற்களைப் பேச மாட்டார்கள். சான்றாக, ஒருவர் பேசுவதைப் பொறுமையுடனும், கவனத்துடனும் கேளாதவர்கள், எப்போதும் தங்கள் கருத்தை முன்வைப்பதிலும், தற்புகழ்ச்சி செய்வதிலுமே குறியாக இருப்பார்கள்.
தொடை: ஒருவு எதுகை/இயைபு.
420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
பொருள்: காதுகளால் கேட்டறியும் கேள்விச்சுவை அறியாமல், வாயால் சுவைக்கும் அறிவை மட்டுமே உணர்ந்த மாக்கள், இறந்தாலும், வாழ்ந்தாலும் உலகிற்கு அதனால் என்ன பயன்?
தொடை: அடி எதுகை.
அரசியல்: 43. அறிவுடைமை
421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
பொருள்: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் போர்க்கருவி. அது பகைவர்களால் உள்புகுந்து நம்மை அழிக்க இயலாமல் செய்துவிடும் அரணும் ஆகும்.
422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
பொருள்: மனம் போன போக்கிலெல்லாம் அதை அலையவிடாமல், அதனை தீமைகளிலிருந்து விலக்கி, நல்வழியில் செலுத்துவது அறிவு.
செலவிடா: கடைக்குறை,
தீதொரீஇ: இன்னிசை அளபெடை.
மனத்தைக் குதிரை எனக் கற்பனை செய்துகொண்டால், இது குறிப்புருவகம் என்கிறார் பாவாணர்.
தொடை: பொழிப்பு மோனை, அடி எதுகை.
423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பொருள்: எந்த ஒரு கருத்தையோ, தகவலையோ யார் சொல்லக் கேட்டாலும், அதை அப்படியே ஏற்காமல், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏற்பதே அறிவுடைமை ஆகும்.
சத்துவம், இராட்சசம், தாமதம் ஆகிய முக்குணங்கள் ஒருவரிடம் மாறிமாறி நிகழ்வதால், நண்பர்கள் தீயனவும், பகைவர்கள் நல்லனவும், சிறந்தோர் அழிவு குறித்தும், இழிந்தோர் உயர்வு குறித்தும் பேசக்கூடும் என்கிற பரிமேலழகரின் விரிவான பொருள்கொள்ளல் சுவையானது.
தொடை: ஒருவு இயைபு, அடி இயைபு.
424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
பொருள்: புரிந்துகொள்ளக் கடினமான செய்திகளையும் எளிய முறையில் சொல்வதும், அறிய வேண்டியனவற்றை அவை எவ்வளவு நுட்பமானதாய், உள்வாங்குவதற்குக் கடினமாய் இருந்தாலும்கூட அறிந்து தெளிவதும் அறிவுடைமை ஆகும்.
எளிய பொருளைக் கடுமையாக்குவதும், அரிய பொருளை எளிமையாக்குவதும் எடுத்தாளப்படும் சொற்களே என்கிறார் பாவாணர்.
அடி இயைபு, அடி எதுகை.
425. உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
பொருள்: உயர்ந்த பண்புடையவர்களோடு நட்புகொள்ள வேண்டும். அவ்வாறு நட்பு பாராட்டுகையில், தொடக்கத்தில் மகிழ்வதும், காலங்கள் செல்லச் செல்ல அவர்களிடம் கசப்பு கொள்வதும் இல்லாமல், சமநிலையுடன் அந்த நட்பைப் பேணுவதே அறிவுடைமை ஆகும்.
உயர்ந்தோரோடு நட்புகொள்வதைச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அந்த நட்பின் தன்மைக்கு உவமை கூறியதால், இது ஒருமருங்குருவகம் அல்லது ஏகதேச உருவக அணி.
426. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.
பொருள்: உயர்ந்தோரைப் பின்பற்றி வாழ்தலே அறிவுடைமை. அது மக்களுக்கு ஒழுக்கத்தையும், அரசருக்குப் புகழையும் பாதுகாப்பையும் வழங்கும்.
தொடை: அடி எதுகை, அடி இயைபு.
427. அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
பொருள்: அறிவுடையவர்கள் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே சிந்தித்து அறியும் ஆற்றல் உடையவர்கள். அறிவில்லாதவர்களுக்கு அத்தகைய ஆற்றல் கிடையாது.
ஒரு விளைவுக்கான எதிர்விளைவு என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து தெளிபவர்கள் அறிவுடையவர்கள் என்கிற கலைஞரின் விளக்கமும் பொருத்தமானது.
தொடை: மேல்க்கதுவாய் எதுகை/மோனை, அடிமோனை.
428. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
பொருள்: அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சாமல் இருப்பது அறிவின்மை. அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சுதல் என்பது அறிவுடையவர்களின் செயல்.
தொடை: கீழ்க்கதுவாய் மோனை/எதுகை, ஒருவு இயைபு, அடிமோனை/எதுகை.
429. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
பொருள்: எதையும் முன்கூட்டியே சிந்தித்துச் செயல்படும் அறிவுடையவர்களுக்கு, அவர்கள் நடுங்கும்படியான துன்பம் எதுவும் வராது.
தொடை: அடி எதுகை
430. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
பொருள்: எதுவும் இல்லாவிட்டாலும், அறிவுடையவர்கள் எல்லாம் உடையவர்களே. எல்லாம் இருந்தும்கூட அறிவில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களே.
சான்றாக, செல்வம் இல்லாவிட்டாலும்கூட, அதைப் படைக்கவும் காக்கவும் தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள். தங்களிடம் செல்வம் இருந்தாலும், அதனைக் காக்கவோ, செல்வம் அழிய நேர்ந்தால் அதனை மீண்டும் உருவாக்கவோ திறனற்றவர்கள் அறிவில்லாதவர்கள்.
தொடை: ஒருவு மோனை/எதுகை/இயைபு.
அரசியல்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
பொருள்: நூல்களில் மட்டுமல்லாது, நடைமுறையிலும் அறன் இதுவென அறிந்து, அறிவாலும், நலத்தாலும், காலத்தாலும் மூத்த சான்றோரை நட்பெனக்கொள்வது அரசனுக்கு இன்றியமையாதது.
தொடை: பொழிப்பு மோனை, அடி இயைபு/எதுகை.
442. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பொருள்: வந்த துன்பத்தைப் போக்கி, வரவிருக்கும் துன்பத்தை முன்கூட்டியே கணித்து, அதனைத் தடுக்கும் வழியறிந்த சான்றோர்களை, மகிழச் செய்து உடன்வைத்துக்கொள்வது அரசனுக்குக் கடமையாகும்.
உறாஅமை: இசைநிறை அளபெடை.
தொடை: ஒருவு எதுகை, அடி எதுகை.
443. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பொருள்: அறிவாலும், செயலாலும் சிறந்து விளங்கும் மூத்தவர்களை, அவர் மகிழும்படிச் செய்து துணையாக வைத்துக்கொள்வது வேறு எதனையும்விட முக்கியமானது.
தொடை: பொழிப்பு மோனை/எதுகை.
444. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
பொருள்: அறிவிலும், ஆற்றலிலும் தம்மைவிடச் சிறந்த பெரியவர்களை உறவாக்கிக்கொள்வதே அரசன் தான் பெற்றிருக்கிற வலிமைகளில் முதன்மையானது.
பொருள், படை, அரண், நட்பு ஆகியவற்றையே அரசனின் வலிமைகள் என்கிறார் பாவாணர்.
வன்மை-வலிமை.
தொடை: பொழிப்பு மோனை.
445. சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
பொருள்: தன்னைச் சுற்றியிருக்கும் அறிஞர் பெருமக்கள் தனக்குக் கண்ணாக விளங்கக்கூடியவர்கள் என்பதால், அத்தகைய அறிஞர் யார் என்று ஆராய்ந்து அரசன் தனதாக்கிக்கொள்ள வேண்டும்.
தொடை: அடி மோனை/எதுகை.
446. தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.
பொருள்: அறிவாலும், ஆற்றலாலும் சிறந்து விளங்கும் அமைச்சர் பெருமக்களைத் தன்னோடு வைத்துக்கொண்டு, அத்தன்மைகளைத் தானும் உடைய அரசனைப் பகைவரால் எதுவும் செய்ய இயலாது.
செற்றார்-பகைவர்.
447. இடிக்கும் துணையாரை ஆள்வரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.
பொருள்: அரசனின் குற்றம் கண்டு, அவனைத் திறந்த மனதுடன் எச்சரிக்கும் துணிவு பெற்ற சான்றோரைத் தனக்கு உற்ற துணையாய்க் கொள்ளும் அரசனின் வலிமையைக் கெடுப்பவர் எவர்?
448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
பொருள்: குற்றம்கண்டு அதைத் துணிவுடன் சொல்லத்தக்க சான்றோரின் துணையில்லாத அரசனின் பாதுகாப்பற்ற ஆட்சி, தானாகவே வீழ்ந்துவிடும்.
ஏமரா-காவல் இல்ஆ.
தொடை: இணை மோனை.
449. முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
பொருள்: முதல் போடாத தொழிலில் ஒருவருக்கு இலாபம் இல்லை. அதுபோல, தூணாக நின்று தாங்கும் அறிஞர் துணையில்லாத அரசு நிலைக்காது.
இக்குறளில் பயின்றுள்ளது எடுத்துக்காட்டு உவமையணி. எனினும்,குறளின் பிற்பகுதியில் மட்டும், அமைச்சரைத் தூண் என்று உருவகித்ததனால், ஒருமருங்குருவகமும் பயின்றுள்ளதைக் காணலாம். ஒரு குறளில் இரண்டு அணிகள் வந்துள்ளதால், இது இணையணியாகும்.
மதலை-தூண்.
450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பொருள்: அறிவும், பண்பும் கொண்ட பெரியவர்களின் தொடர்பை இழத்தல் என்பது, ஒரு அரசன் பலரோடு பகைகொள்வதைக்காட்டிலும் பத்துமடங்கு திமையை அவனுக்கு விளைவிக்கும்.
தொடை: கூழை மோனை, அடி எதுகை/இயைபு.
அரசியல்: 48. வலி அறிதல்
471. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
பொருள்: தான் மேற்கொள்ளவிருக்கும் செயலின் வலிமையையும், தன்னுடைய வலிமையையும், தனது எதிரியின் வலிமையையும், தனக்கும் எதிரிக்கும் துணையாக இருப்பவர்களின் வலிமையையும் ஆரய்ந்து அறிந்த பின்பே ஒரு செயலைத் தொடங்க வேண்டும்.
தொடை: கீழ்க்கதுவாய் இயைபு, அடி இயைபு.
472. ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
பொருள்: தனக்குப் பொருந்துகின்ற ஒரு செயலைத் தெரிந்து, அது தொடர்பாக அறிய வேண்டியவற்றை அறிந்து, தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பவனுக்குக் கூடாத செயல் என்று எதுவும் இல்லை.
தொடை: அடி எதுகை.
473. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
பொருள்: தம்முடைய வலிமை எதில் இருக்கிறது என்பதை அறியாமல், மன எழுச்சி காரணமாக ஒரு செயலைத் தொடங்கி, அதைத் தொடர்ந்து ஆற் இயலாமல், இடையிலேயே நிறுத்திவிடுகிறவர்கள் பலராய் இருக்கிறார்கள்.
தன்னுடைய வலிமையை அறியாது போரில் சென்று, தோற்று அழிந்த அரசர்கள் பலர் என்பதே நேரடிப் பொருள்.
தொடை: அடி எதுகை.
474. அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
பொருள்: மற்றவர்களோடு மனம் ஒப்பிப் பழகாமல், தன்னுடைய வலிமை இது என அறியாமல் தருக்கிப் பேசித் திரிபவன் விரைவில் அழிந்து போவான்.
பகை எதுவும் இல்லாமலேயே அண்டை நாட்டின்மீது படையெடுத்துச் சென்று வெல்வது அந்த காலத்தில் ஓர் அரசனுக்கு விதிக்கப்பட்ட கடமை எனக் கருதப்பட்டது. அப்படியிருக்க, அண்டை நாட்டு அரசன் தன்னைவிட வலிமையானவன் எனில், அவனோடு நட்புகொள்ளவோ, மெலியவன் எனில், அவன்மீது போர் தொடுக்கவோ வேண்டும். இந்த இரண்டும் செய்யாமல் இருப்பதே குற்றம் என்ற நிலையில், தன் வலிமை அறியாமல், தற்பெருமை பேசித் திரியும் அரசன் விரைவாக அழிந்துபோவான் என்கிற பாவாணரின் விளக்கம் சுவையானது.
தொடை: பொழிப்பு மோனை.
475. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
பொருள்: வண்டியில் ஏற்றப்படுவது மயிலிறகே ஆனாலும்கூட, ஒரு அளவைக் கடந்தால், வண்டிச் சக்கரத்தின் அச்சு முரியும். அதுபோல, சிறுசிறு பகைவர்கள் மொத்தமாக ஒன்றுகூடிவிட்டால், எத்தகைய வலிமையுடைய அரசனும் தோற்று அழிவான்.
சகடம்-வண்டிச் சக்கரம்,
இறும்-முரியும்.
கூற வந்த கருத்தை நேரடியாகக் கூறாமல், அதை ஒரு உவமையின் வழியே மறைமுகமாகக் கூறுவதால், இக்குறளில் பயின்று வந்துள்ளது ‘பிறிது மொழிதல்’ அணியாகும்.
இதனை ஒட்டணி என்றும், நுவலா நுவற்சி அணி என்றும் கூறுவர்.
இது புறத்திணைப் பாடல்களில் பயின்றுவருகையில் மேற்கூறிய பெயர்களிலும், அகத்திணைப் பாடல்களில் எடுத்தாளப்பட்டால், உள்ளுறை உவமம் என்றும் அழைக்கப்படுகிறது.
476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
பொருள்: மரத்தின் நுனிவரை ஏறிவிட்ட ஒருவர், மன ஊக்கத்தால் அதற்கு மேலும் ஏற முயன்றால், அந்த முயற்சியே அவர் உயிரைப் பறித்துவிடும். அதுபோல, போர் செய்து வெற்றிகொள்ளும் அரசன், தன் அளவறியாமல், மேலும் மேலும் போர்செய்யப் புகுந்தால், அதுவே அவனுக்கு அழிவை உண்டாக்கும்.
பிறிது மொழிதல் அணி.
477. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
பொருள்: தன் செல்வ வளத்தின் அளவு இதுவென அறிந்து கொடைச் செயல்களில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபடுதலே அந்தச் செல்வத்தைப் பேணும் வழியாகும்.
அரசனின் மொத்த வருவாயில் நான்கில் இரண்டு பங்கை ஆட்சிச் செலவுக்கும், ஒரு பங்கை எதிர்பாராத ஆபத்துக் காலங்களில் ஏற்படும் செலவுக்கும், எஞ்சிய ஒரு பங்கைப் பிறருக்கான கொடைக்கும் என வகுத்தலே செல்வத்தைப் போற்றும் நெறி என்கிறார்கள் பரிமேலழகரும் பாவாணரும்.
தொடை: அடி எதுகை.
478. ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
பொருள்: செலவுகள் பெருகாமல் இருந்தால், வருவாய் குறைவாக இருந்தாலும் துன்பமில்லை.
தொடை: அடி எதுகை/இயைபு.
479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
பொருள்: கையிருப்பு, தற்போதைய மற்றும் எதிர்கால வருவாய் போன்றவற்றைக் கணக்கிட்டு, அளவோடு செலவிட்டு வாழாதவனின் அன்றாடம், அவன் வசதியோடு வாழ்வதாகத் தோன்றினாலும், இறுதியில் எதுவும் எஞ்சாமல் அழியும்.
தொடை: ஒருவு எதுகை.
480. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
பொருள்: தனக்கு இருக்கும் பொருளாதார வளத்தை ஆராயாமல், ஒருவன் கொடுத்துக்கொண்டே இருந்தால், அவனுடைய செல்வம் விரைவில் இல்லாமல் அழியும்.
“பிறருக்கு உதவுவதனால் ஒருவனுக்குக் கேடு வருமென்றால், அதனைத் தன்னை விற்றும் அவன் வாங்கிக்கொள்ள வேண்டும் என ஒப்புரவாண்மையைச் சிறப்பிக்கும் வள்ளுவர், இந்தக் குறளில் தனது செல்வத்தின் அளவறிய வேண்டும் என்கிறாரே!” என பாவாணர் தனக்குத் தானே ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டு, அங்கே சொல்லப்பட்டது தனிப்பட்ட ஒரு செல்வருக்கான அறம்; அதே அறத்தை ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குப் பொருத்திப் பார்க்க இயலாது என்கிறார்.
தொடை: அடி எதுகை.
அரசியல்: 49. காலம் அறிதல்
481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
பொருள்: தன்னைவிட வலிமையான கோட்டானை காகம் பகலில் வென்றுவிடும். அதுபோலப் பகைவரை வெல்ல நினைக்கும் வேந்தன் அதற்கான சரியான தருணம் பார்த்து வினைமுடிக்க வேண்டும்.
கூகை-ஆந்தை,
இகல்-பகை.
எடுத்துக்காட்டு உவமையணி.
தொடை: ஒருவு எதுகை/இயைபு.
482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
பொருள்: மேற்கொள்ளும் செயலைத் தொடர் வெற்றிகளோடு பிணைப்பது, காலத்தோடு பொருந்தி செயலாற்றுதல் என்கிற பண்புக் கயிறே ஆகும்.
ஆர்க்கும்-பிணைக்கும்.
தொடை: ஒருவு எதுகை.
483. அருவினை யென்ப உளவோ கருவியான்
கால மறிந்து செயின்.
பொருள்: உரிய கருவிகளைக்கொண்டு, சரியான காலத்தைத் தேர்ந்தெடுத்துச் செய்தால், முடிக்க இயலாத அரிய செயலும் உண்டோ!
கருவி என்பவை, அறிவு, பொருள், வலிமை என்கிற மூவகை ஆற்றலும், வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி ஆகிய நான்கு காரணங்களும் ஆகும். அத்தோடு உரிய காலத்தையும் சேர்த்துக்கொள்கிறார் வள்ளுவர்.
தொடை: ஒருவு எதுகை.
484. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
பொருள்: தக்க தருணத்தையும், தகுந்த இடத்தையும் தேர்ந்துகொண்டு செயலாற்றினால், இந்த உலகத்தையே விரும்பினாலும் பெறலாம்.
இடம் என்பது, முந்தைய குறளி்ல் கருவிகளாகச் சொல்லப்பட்டவையின் விரிவே ஆகும். அதேசமயம், அரசனுக்குப் போர் செய்யும் காலம் மட்டுமல்ல, விரைதலுக்கும் மறைதலுக்கும் உரிய இடத்தைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.
தொடை: ஒருவு எதுகை.
485. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
பொருள்: உரிய வலிமைகள் இருந்தும்கூட, தக்க தருணத்துக்காகக் காத்திருப்பவர்கள், தங்கள் செயலால் இந்த உலகத்தையே வென்றுவிடும் வாய்ப்பைப் பெறுவர்.
தொடை: அடி எதுகை.
486. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.
பொருள்: வெல்வதற்கான ஊக்கத்தைக் கொண்டிருப்பவன் உரிய காலத்துக்காகக் காத்திருப்பதென்பது, சண்டைக்குத் தயாரான ஆட்டுக்கடா தன் காலைப் பின்னே இழுத்து முன் பாய்வது போன்றது.
தகர்-ஆடு,
எடுத்துக்காட்டு உவமையணி.-
தொடை: அடி எதுகை.
487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பொருள்: அறிவுடையவர்கள், தனக்கு தீங்கு செய்தவரிடத்தில் உடனடியாகத் தன் சினத்தைக் காட்டாமல், உரிய காலம் வாய்ப்பதற்காகக் காத்திருப்பர்.
பொள்: விரைவு குறித்த இடைச்சொல்.
வேர்த்தல்-சினத்தால் உள்ளுக்குள் புழுங்குதல்,
ஒள்ளியவர்-அறிவுடைய அரசர்.
தொடை: அடி எதுகை.
488. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பொருள்: தன்னைவிட வலிமையான பகைவரிடத்தில் பணிந்து சென்று காலம் பார்க்க வேண்டும். அவருக்கு அழியும்காலம் நேர்கையில், நாம் பணிந்தது போல அல்லாமல், அவருடைய தலை தலைகீழாகத் தொங்கும்.
இறுவரை-இறுதி,
செறுநர்-பகைவர்,
கிழக்காம்-கீழே.
489. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
பொருள்: எப்போதும் கிடைக்கப்பெறாத காலமும் வாய்ப்பும் கிடைத்த மாத்திரத்திலேயே, செய்வதற்கு அரிய செயல்களை செய்துவிட வேண்டும்.
முயற்சியால் அல்லாமல், தானாகவே அரிதாக வாய்த்திருக்கிற காலத்தை எய்தற்கரியது என்றும், அது வாய்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை இயைந்தக்கால் என்றும், அது இனிமேல் வாய்க்காமல் போகலாம் என்பதை அந்நிலையே என்றும், அத்தகைய அரிதினும் அரிதான தருணம் வாய்க்காதபோது சிறப்பான செயல்கள் வாய்க்காது என்பதை செய்தற்கரிய என்றும் வள்ளுவத்துக்கு பாவாணர் தரும் சொற்பொருள் விளக்கம் சுவையானது.
தொடை: அடி எதுகை/இயைபு.
490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
பொருள்: தனக்கான இரை கிடைக்கும்வரை கவனத்துடன் காத்து நிற்கும் கொக்குபோல தருணம் பார்த்துப் பொறுமை காக்க வேண்டும். இரை கிடைத்தவிடத்து, அதைக் குத்திக் கிழித்துத் திண்ணும் அதன் கூர்ப்பான அலகுபோல உற்ற காலம் வாய்த்துவிட்டால் உடனடியாகச் செயலில் ஈடுபட்டு அதை முடிக்க வேண்டும்.
உவமையணி (தொழிலுவமம்.
தொடை: அடி இயைபு.
அமைச்சியல்: 67. வினைத்திட்பம்
661. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
பொருள்: ஒருவன் மேற்கொள்ளும் செயலின் உறுதி என்பது, அவனுடைய மன உறுதியை மட்டுமே சார்ந்தது. மற்றவை எல்லாம் வேறானவை.
மற்றவை என்பது, ஒரு அரசனுக்கு என்றால், படை, குடி, நட்பு, அரண் எனக்கொள்ளலாம்.
சாமானியனுக்கோ அது இடம், பொருள், காலம் என்பவற்றைக் குறிக்கும்.
தொடை: ஒருவு இயைபு.
662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
பொருள்: ஊறு நேராதபடி ஆராய்ந்து செயலை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு, நம்மையும் மீறி ஏதேனும் ஊறு நேர்ந்துவிட்டால், மனம் தளராமல் அதை எதிர்கொள்ள வேண்டும். இதுதான் செயலின் வலிமை குறித்து மூத்தோர் ஆய்ந்து சொன்ன நீதியாகும்.
ஊறு-துன்பம்.
663. கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.
பொருள்: செய்து முடிக்கும்வரை ஒரு செயல் குறித்து வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. அப்படி வெளிப்பட்டால், அந்தச் செயலுக்கு எதிராக நிறையத் தடைகள் வந்து சேரும்.
தொடை: ஒருவு எதுகை.
664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
பொருள்: இதை இப்படிச் செய்து முடிக்கலாம் எனச் சொல்லித் திட்டமிடுதல் எவருக்கும் எளிமையான செயலாகும். ஆனால், திட்டமிட்டபடி அதைச் செய்துகாட்டுவது அத்தனை எளிமையானதில்லை.
தொடை: அடி மோனை/எதுகை.
665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
பொருள்: மன உறுதியுடன் செயல்த்திறம் பெற்ற மாண்புடையவர்கள், ஓர் அரசருக்கு மிகுந்த பயனை விளைவிக்கக்கூடியவர்கள் என்பதால், அவர்கள் அனைவராலும் புகழ்ந்தேத்தப்படுவார்கள்.
தொடை: அடி எதுகை/இயைபு.
666. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
பொருள்: ஒருவர் தான் மேற்கொள்ளும் செயலில் திடமான மன உறுதியுடனும் இடைவிடாத முயற்சியுடனும் ஈடுபட்டால், தான் அடைய வேண்டும் என நினைத்தவற்றை எல்லாம் நினைத்ததுபோலவே அடைய முடியும்.
தொடை: முற்றுமோனை, கீழ்க்கதுவாய் எதுகை, அடி எதுகை.
667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
பொருள்: ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது. ஏனெனில், உருண்டு ஓடும் பெரிய தேரைத் தாங்குவது அதன் சக்கரத்தில் இருக்கிற மிகச் சிறிய அச்சாணியே ஆகும். உருவத்தால் சிறியவர்களிடம்கூட வினைத்திட்பம் மிகுந்திருக்கும். மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது என்பதைப்போல.
உவமையணி.
தொடை: ஒருவு மோனை/எதுகை.
668. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.
பொருள்: நன்கு ஆராய்ந்து தெரிந்துகொண்ட ஒரு செயலை, மனத்தளர்ச்சியும், காலம் தாழ்த்துதலும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும்.
துளங்காது-மனம் தளராது.
தொடை: இணை மோனை, ஒருவு இயைபு.
669. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
பொருள்: நாம் செயல்களை மேற்கொள்ளும்போது துன்பங்கள் குறுக்கிட்டாலும், அந்தச் செயல்கள் இறுதியில் கொடுக்கவிருக்கும் இன்பத்தைக் கருதி அவற்றைத் துணிவுடன் செய்து முடிக்க வேண்டும்.
தொடை: ஒருவு மோனை, அடி எதுகை/இயைபு.
670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
பொருள்: உடல்வலிமை முதலான பிற வலிமைகள் இருந்தாலும், மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவர்களை இந்த உலகம் விரும்பி ஏற்காது.
மனத்திண்மை, மதித்திண்மை, அறிவுத்திண்மை, உடல்த்திண்மை, வினைத்திண்மை போன்ற அகம் சார்ந்த உறுதிகளும், கருவித்திண்மை, காலத்திண்மை, இடத்திண்மை, படைத்திண்மை போன்ற புறம் சார்ந்த வலிமைகளும் இருந்தாலும்கூட, மேற்கொள்ளும் செயல்களில் திண்மை வேண்டும் என விரித்துரைக்கிறார் பாவாணர்.
தொடை: இணை மோனை, ஒருவு எதுகை/இயைபு.
கூழியல்: 76. பொருள் செயல்வகை
751. பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
பொருள்: ஒரு பொருட்டாக மதிக்கப்படாதவர்களையும் மதிக்கும்படி செய்துவிடுவது பணமேயாகும்.
சொற்பொருள் பின்வரு நிலையணி.
தொடை: பொழிப்பு மோனை/எதுகை, அடி மோனை/எதுகை.
752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
பொருள்: பணம் இல்லாத ஏழையை எல்லோரும் புறக்கணிப்பர். பணம் உடைய செல்வந்தர்களை எல்லோரும் பாராட்டிச் சிறப்பு செய்வர்.
எள்ளுதல் என்றால், சந்திக்கவோ, உரையாடவோ விரும்பாமை; சிறப்பு செய்தல் என்றால், அரசர் தொடங்கி அனைவரும் வாழ்த்தி, பெற்றோர் மற்றும் அரசர் நீங்கலாக, பிறர் கைகூப்பித் தொழுவதும், அமர இறுக்கை தருவதும், அவரின் ஆணைகளை மறுக்காமல் நிறைவேற்றுவதும் எனப் பாவாணர் விரித்துப் பொருள்கூறுகிறார்.
தொடை: கீழ்க்கதுவாய் எதுகை, அடி எதுகை.
753. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பொருள்: பணம் என்கிற அணையாத விளக்கு கையில் இருந்தால், அது நாம் உற்ற துன்பத்தை அல்லது பகையை எந்த திசைக்கும் சென்று தீர்க்கும்.
ஒருமருங்குருவகம் அல்லது ஏகதேச உருவக அணி.
தொடை: இணை மோனை, ஒருவு எதுகை.
754. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
பொருள்: அறிவாலும், உழைப்பாலும், நேர்மையோடு, எவருக்கும் தீங்கு செய்யாது சேர்க்கப்பட்ட செல்வம், அறத்தையும் வழங்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
தொடை: ஒருவு எதுகை.
755. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
பொருள்: அருள் நெறியிலும், அன்பு நெறியிலும் வாராத செல்வத்தை, அதை தீமையானது என்று விளக்கிவிட வேண்டும்.
தொடை: இணை இயைபு.
756. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
பொருள்: உடையவர் இறந்துவிட, காப்பாரின்றிக் கைவிடப்பட்ட செல்வம், சாலை மற்றும் கடல் வணிகத்தில் ஈட்டப்பட்ட வரி, போரில் புறம் ஓடிய பகைவர் விட்டுச்சென்ற செல்வம் ஆகியவை அரசனுக்கான வருவாய்களாம்.
இவைகளோடு, பழம்புதையல், குடிமக்கள் காணிக்கை, நட்பு கொண்டார் நன்கொடையும் சேரும் என்கிறார் பாவாணர்.
தொடை: இணை மோனை, அடி எதுகை/இயைபு.
757. அருளென்னும் அன்புஈன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
பொருள்: அன்பென்னும் அறத்தாயால் பெறப்பட்ட அருள் என்னும் குழந்தையை, தொடர்ந்து செழிப்போடு வளர்ப்பது பொருள் என்னும் செவிலித்தாய்தான்.
ஒருமருங்குருவகம்.
தொடை: ஒருவு எதுகை/இயைபு.
758. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
பொருள்: தன் கையிலுள்ள செல்வத்தால் பிறரை ஏவி ஒரு தொழிலைச் செய்வதென்பது, மலையின் மீது ஏறி நின்றுகொண்டு, அச்சமின்றி, சாகவாசமாக அடிவாரத்தில் நிகழும் யானைச் சண்டையைக் காண்பதற்கு ஒப்பாகும்.
உவமையணி.
759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனிற் கூரியது இல்.
பொருள்: பொருள் ஈட்டுக! பகைவரின் செறுக்கை அறுக்கும் அது போன்ற கூரிய வாள் வேறு எதுவும் இல்லை.
ஒருமருங்குருவகம்.
தொடை: மேற்கதுவாய் மோனை.
760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
பொருள்: நல்வழியில் மிகுதியாகச் சேர்க்கப்பட்ட பொருளால், அறம் மற்றும் இன்பம் ஆகிய பிற பொருள்கள் எளிதில் வந்து ஒன்றுகூடும்.
தொடை: ஒருவு எதுகை/இயைபு.
நட்பியல்: 79. நட்பு
781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு?
பொருள்: நட்பைவிட அரிய உறவு எது? அந்த நட்பைப்போல், செய்யும் செயலுக்குக் காவலாக அமைவதும் வேறு உண்டோ?
தொடை: அடி இயைபு.
782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
பொருள்: அறிவுடையவர்கள் இடையேயான நட்பு, நிறைமதி போன்று மெல்ல வளரும். அறிவில்லாதவர்கள் இடையேயான நட்பு, முழுமதி தேய்வதுபோல் மெல்லத் தேயும்.
எடுத்துக்காட்டு உவமையணி.
தொடை: ஒருவு எதுகை.
783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பொருள்: படிக்கப் படிக்க புத்தக வாசிப்பு இன்பம் தருவதுபோல, பழகப் பழகப் பண்புடையவர்களின் நட்பு இன்பம் தரும்.
உவமையணி.
தொடை: ஒருவு இயைபு.
784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
பொருள்: இருவருக்கிடையேயான நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கானது மட்டுமல்ல; அவர்களுள் எவரேனும் எல்லை கடந்து தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டித் திருத்த முற்படவும் வேண்டும்.
தொடை: பொழிப்பு மோனை.
785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.
பொருள்: நண்பர்களாகத் திகழ்வதற்கு இருவரும் சந்தித்து, கூடி மகிழ வேண்டும் என்பதில்லை. ஒத்த மன உணர்வே நட்புக்கு அடித்தளம் ஆகும்.
தொடை: ஒருவு எதுகை.
786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
பொருள்: சந்திக்கும் வேளையில், ஒருவருக்கொருவர் இன்முகம் காட்டிச் சிரித்துக்கொள்வதல்ல நட்பு. அகம் விரிந்து சிரித்துப் பேசுவதே நட்பு.
தொடை: அடி எதுகை/இயைபு.
787. அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
பொருள்: நண்பனுக்கு வந்த துன்பத்தை நீக்கி, அவனை நல்வழியில் செலுத்தி, நீக்க இயலாத துன்பங்களில் தானும் பங்கெடுத்து துன்பம் உறுவது உண்மையான நட்பாகும்.
தொடை: ஒருவு மோனை/எதுகை, அடி மோனை.
788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பொருள்: உடுத்தியிருக்கும் ஆடை சற்று நெகிழ்ந்தாலே எப்படி கை தானே சென்று அதனைச் சரிசெய்கிறதோ, அதைப்போல நண்பனுக்குத் துன்பம் வந்தால் ஓடிச் சென்று உதவுபவனே உண்மையான நண்பன்.
உவமையணி.
தொடை: அடி எதுகை.
789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
பொருள்: நட்பிற்கு உயர்வு என்று சொல்லப்படும் வீற்றிருக்கை எதுவெனில், எப்போதும் ஒருவருக்கொருவர் வேறுபடாமல் நின்று, ஒருவர் மற்றொருவருக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் உதவுவதேயாகும்.
கொட்பு-திரிதல்.
தொடை: ஒருவு எதுகை.
790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
பொருள்: நண்பர்கள் ஒருவருக்கொருவர் “நான் அவருக்கு இப்படிப்பட்டவன், அவர் எமக்கு அப்படிப்பட்டவர்” என மாறிமாறிப் புகழ்ந்துகொண்டாலும் அவர்களுக்கிடையேயான நட்பு சிறுமைப்பட்டுவிடும்.
தொடை: கூழை மோனை, அடி எதுகை.
குடியியல்: 99. சான்றாண்மை
981. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
பொருள்: ஆற்ற வேண்டிய தன்னுடைய கடமைகளில் தவறாது ஒழுகுபவர்களுக்கு நல்லவைகளெல்லாம் கடமைகளாம்.
தொடை: ஒருவு மோனை/எதுகை.
982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
பொருள்: சான்றோருக்கு அழகு நல்ல பண்புடையவராக இருத்தலே. பிறவெல்லாம் அழகாகாது.
உள்ளதூஉம்: இன்னிசை அளபெடை.
தொடை: ஒருவு இயைபு.
983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
பொருள்: பிறர்மேல் அன்பு பேணுதல், குற்றத்துக்கு அஞ்சுதல், ஒப்புரவு உடையவராக இருத்தல், எளியார்மேல் இரக்கம் காட்டுதல், உண்மை பேசுதல் ஆகிய ஐந்து குணங்களும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
ஒருமருங்குருவகம்.
984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
பொருள்: தவத்திற்குச் சிறந்த அறம் என்பது எவ்வுயிரையும் கொல்லாமையாகும். அதுபோல, சான்றாண்மைக்குச் சிறப்பான அறம் என்பது, பிறருடைய குற்றத்தைச் சொல்லாமல் இருப்பது.
நோன்மை-தவம்.
எடுத்துக்காட்டு உவமையணி.
தொடை: அடி மோனை/எதுகை/இயைபு.
985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
பொருள்: செயல்புரியும் ஒருவருக்குச் சிறந்த சான்றாண்மை என்பது, அவர் அச்செயலை முடிப்பதற்குத் துணையாகக்கொண்டோரிடம் பணிந்து நடத்தல் ஆகும். அதுவே பகைவரையும் நட்பாக்கிக்கொள்ளும் சிறந்த கருவி.
தொடை: இணை மோனை/எதுகை, அடி எதுகை.
986. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
பொருள்: தனக்குச் சமமாக இல்லாதவரிடத்திலும் பெறும் தோல்வியை ஏற்றுக்கொள்வதே சான்றாண்மைக்கு உரைகல்லாகும்.
தொடை: ஒருவு எதுகை.
987. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
பொருள்: தனக்குத் தீமை செய்தவருக்கும் நன்மை செய்யாவிட்டால், அவர் சான்றாண்மையுடையவராக இருந்தும் என்ன பயன்?
தொடை: பொழிப்பு மோனை.
988. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்.
பொருள்: சான்றாண்மை என்கிற மன உறுதி ஒருவருக்கு வாய்க்கப்பெற்றால், அவருக்கு வறுமை ஒரு பொருட்டே இல்லை; அந்த வறுமை அவருக்குச் சிறுமையும் அல்ல.
இன்மை-வறுமை.
தொடை: பொழிப்பு மோனை, அடி இயைபு.
989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
பொருள்: சான்றாண்மை என்கிற பெருங்கடலைத் தன்னகத்தே கொண்டவர், ஊழிக்காலம் வந்து கடல்கள் கரைகடந்தாலும், தாங்கள் தங்கள் பண்பிலிருந்து பிறழ மாட்டார்கள்.
ஆழி-கடல்,
ஊழி-பேரழிவு.
ஒருமருங்குருவகம்.
தொடை: அடி எதுகை/இயைபு.
990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.
பொருள்: சான்றோர், தங்களின் சால்புத் தன்மையிலிருந்து விலகிவிட்டால், மக்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் இந்த பூமியின் பொறுமை அழிந்துபோகும்.
தொடை: இணை மோனை/எதுகை.
குடியியல்: 100. பண்புடைமை
991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பொருள்: அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியவராக இருத்தல், பண்புடைமை என்னும் உயர்ந்த குணத்தை எளிதில் பெற்றிட சிறந்த வழியாகும்.
தொடை: கூழை மோனை, அடி எதுகை.
992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பொருள்: எல்லோரிடத்திலும் அன்புடையவராக இருத்தல், நல்லிணக்கத்தைப் போற்றும் உயர் குடியில் பிறத்தல் ஆகியவைப் பண்புடைமை என்னும் ஒழுக்கத்தைப் பெறும் வழிகளாகும்.
தொடை: அடி இயைபு.
993. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
பொருள்: நற்பண்பு உடையவர்களைப்போல முக அமைப்பு கொண்டால், ஒருவர் பண்புடையவராக ஆகிவிடமாட்டார். பண்புடை மக்களோடு பொருந்த வேண்டுமானால், சிறந்த பண்புகளைக்கொண்ட உள்ளம் அமைய வேண்டும். அதாவது, உறுப்பொத்தல் அல்ல உள்ளம் ஒத்தலே பண்புடையவரோடு பிணைக்கும்.
வெறுத்தக்க-பொருந்தத் தக்க.
சொற்பொருள் பின்வரு நிலையணி.
தொடை: ஒருவு எதுகை, அடி இயைபு.
994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு.
பொருள்: நீதி தவறாமல், பிறருடைய நன்மையைக் கருதிச் செயல்படுபவர்களின் பண்பினை இந்த உலகம் பாராட்டும்.
தொடை: இணை மோனை, ஒருவு எதுகை.
995. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
பொருள்: விளையாட்டாய்க்கூட ஒருவரைப் பழித்தல் பண்பாகாது. பிறருடைய இயல்பை அறிந்து அதன்படி நடப்பவர்கள் பகைவரிடத்திலும் பண்புடையவர்களாகவே நடந்துகொள்வர்.
தொடை: ஒருவு எதுகை/இயைபு.
996. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பொருள்: இந்த உலகம்,பண்புடையவர்களைச் சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் இல்லையென்றால், இது மண்ணில் புகுந்து அழிந்துபோகும்.
மன்: ஒழியிசைச்சொல்.
தொடை: இணை மோனை, அடி எதுகை.
997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
பொருள்: அரம் போல அறிவினால் கூர்மை உடையவர்களிடம் மக்களுக்கான பண்பில்லை என்றால், அவர்கள் ஓரறிவு உயிராகிய மரத்துக்கே ஒப்பாவார்கள்.
உவமையணி.
தொடை: ஒருவு எதுகை.
998. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
பொருள்: நட்புகொள்ள இயலாதபடிக்கு நமக்கு தீமை செய்யும் ஒருவரிடத்தில் நாம் அன்போடும் பொறுமையோடும் நடந்துகொள்ளாவிட்டால் அது பண்பற்ற இழுக்காகும்.
தொடை: பொழிப்பு மோனை, அடி எதுகை/இயைபு.
999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
பொருள்: பிறருடன் கலந்து பேசி மகிழத் தெரியாதவர்களுக்கு, இந்ந்த உலகம் பகலிலும் இருளாகவே காட்சியளிக்கும்.
தொடை: அடி எதுகை.
1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமையால் திரிந்து அற்று.
பொருள்: மோசமான பாத்திரத்தில் ஊற்றப்பட்ட பால் திரிவதுபோல, பண்பில்லாதவனிடத்தில் இருக்கும் பெருஞ்செல்வமும் எவருக்கும் பயன்படாமல் அழிந்துபோகும்.
உவமையணி.