நடப்பு நிகழ்வுகள் – தமிழ்நாடு

 

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்: பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (செப். 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரகக் கட்டிடம் 6 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டம், எழும்பூரில் பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரகக் கட்டிடமானது, தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக 24,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல் துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளைக் கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை ஆகியவையும், முதல் தளத்தில், அன்று முதல் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகள், வாள்கள், தோட்டாக்கள் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.

மேலும், காவல் துறையில் சிறப்பாகப் பணி செய்த காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வழங்கப்பட்டு வரும் மாதிரி பதக்கங்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடர்பான அக்காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்துக் காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தித் தொகுப்புகள், காவல் ஆணையாளர் அலுவலக அறையில் உள்ள அரிய பழம்பொருட்கள், அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைத்தொடர்புக் கருவிகள், காவல்துறை சேவை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவையும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இக்காவல் அருங்காட்சியகத்தில், கூடுதல் வசதிகளாக கண்காணிப்பு கேமரா, தீ தடுப்பு சாதனங்கள், குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, சிற்றுண்டியகம், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

நாட்டிலேயே முதல் முறையாக பயோ சென்சார் கண்காணிப்புடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தொடக்கம்:

நாட்டிலேயே முதல் முறை யாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமெரிக் கத் தொழில் நுட்பத்தில் உருவாக் கப்பட்ட வயர்லெஸ் பயோ சென்சார் கருவியுடன் கரோனா நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை அளிக்கும் முறை தொடங்கியது.

‘கரோனா’ தொற்று பேரிடர் காலத்தில் நோயாளிகளை மருத்துவக்குழுவினர் அடிக்கடி அருகே சென்று கண்காணிக்க இயலாது. போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நோயாளி களுக்கு சிகிச்சை அளித்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. சிலர் உயிரிழக் கவும் நேரிட்டது. தற்போது கரோனா 3-வது அலை அச்சம் நிலவுகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகா தாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நாட்டி லேயே முதல் முறையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் கரோனா நோயாளிகளை அமெரிக்க தொழில் நுட்பத்தில் தயாரான வயர்லெஸ் பயோ சென்சார் கருவியுடன் கண்காணித்து சிகிச்சை அளிக்கும் முறையை கடந்த வாரம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.

தற்போது, இந்த உயர் தொழில்நுட்பக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கும் முறை நேற்று முதல் தொடங்கியது.

இதுகுறித்து மருத்துவமனை ‘டீன்’ ரத்தினவேலு கூறியதாவது:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு லைப் சயின்ஸ் நிறுவனம் ஆயிரம் வயர்லெஸ் பயோ சென்சார் கருவிகளை வழங்கி உள்ளது. இக்கருவிகள் ஐசியூவில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும். இதன் மூலம் நோயாளியின் சுவாசம், இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு, வெப்பநிலை உள்ளிட்ட 6 விதமான உடலியக்கச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

மருத்துவமனையில் உள்ள நர்ஸிங் ஸ்டேசனில் வைத்து கருவி மூலம் சேகரிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து நோயாளிக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கலாம். இந்தக் கருவியை நோயாளியின் உடலில் பொருத்துவதால் எந்தவொரு பிரச்சினையும ஏற்படாது. ஒரு செவிலியர் 50 நோயாளிகளைக் கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

செப்டம்பர் 27 உலக சுற்றுச்சூழல் தினம்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்படும் சிறார்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு: என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்படும் சிறார்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் கொலைக் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் 48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டில் 53 கொலைக் குற்றங்களாகவும், 2018-ம் ஆண்டில் 75 ஆகவும், 2019-ம் ஆண்டில் 92 ஆகவும் , 2020-ம் ஆண்டில் 104 குற்றங்களாகவும் அதிகரித்துள்ளன.

2020-ம் ஆண்டில் அதிகரிப்பு

2016-ம் ஆண்டில் 1,603 கொலைகளில் 48 கொலைக் குற்றங்கள் அதாவது 3 சதவீதம் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இது படிப்படியாக அதிகரித்து 2020-ம் ஆண்டில் 1,661 கொலைகளில் 104 குற்றங்களில் அதாவது 6.3 சதவீதம் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கொலைவழக்குகளில் சிறார்கள் ஈடுபட்ட வழக்குகள் எண்ணிக்கை

2016-ம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்தது படிப்படியாக 2017-ல் 3.4%, 2018-ம் ஆண்டில் 4.8%, 2019-ம் ஆண்டில் 5.3%, 2021-ம் ஆண்டில் 6.1% என அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகம்

தேசிய அளவில் கணக்கிட்டால் கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்படும் அளவு கடந்த 2016-ம் ஆண்டில் இருந்ததில் இருந்து 2020-ம் ஆண்டு வரை குறைந்து பின்னர் சற்று அதிகரித்துள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9% சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இடைப்பட்ட 2017-ம் ஆண்டில் 28 ஆயிரத்து 653 கொலைகளில் 2.5% எனக் குறைந்தது. 2018-ம் ஆண்டில் 29 ஆயிரத்து 17 கொலைகளில் 2.6% சிறார்களும், 2019-ம் ஆண்டில் 28,918 கொலைகளில் 2.9% மற்றும் 2020-ம் ஆண்டில் 29,193 கொலைகளில் 2.6% சிறார்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்படும் அளவு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டு தோறும் சிறார்கள் குற்ற சதவீதம் அதிகரித்த விவரம்

சிறார் குற்றங்கள் அதிகரிப்பு

அதிலும் 2019, 2020-ம் ஆண்டுகளில் ஒட்டுமொத்தக் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. அதாவது, தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் 1,745 கொலைகள் நடந்துள்ளன. 2020-ம் ஆண்டில் 1661 ஆகக் கொலைகள் குறைந்துள்ளன. ஆனால், சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் அளவு 2019-ம் ஆண்டில் 92லிருந்து 2020-ம் ஆண்டில் 104 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய சராசரியோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் சிறார்கள் கொலைக் குற்றங்களில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் அளவு அதிகரித்திருக்கிறது. ஆனால் நாடு முழுவதும் சிறார்கள் கொலைக் குற்றங்களில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் சதவீதத்தைக் கணக்கிட்டால் 3 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. டெல்லியில் 12.1% சிறார்கள், குஜராத்தில் 6.7%, மத்தியப் பிரதேசம் 6.4% என அதிகமான சதவீதத்தில் சிறார்கள் கொலைக் குற்றங்களில் சேர்க்கப்படுகின்றனர்.

தேசிய அளவில் சிறார்கள் குற்ற சதவீதம்

எப்படிக் கணக்கிட்டாலும், சதவீதத்தின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் சதவீதம் வேகமாக அதிகரித்தது தமிழகத்தில்தான்.

மதுரை நகர்ப்புறத்தில் அதிகம்

சென்னை, மதுரை புறநகர் போலீஸ் எல்லை, மதுரை நகர்ப்புறம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை நகர்ப்புறத்தில் நடந்த 40 கொலை வழக்குகளில், 8 வழக்குகளில் சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது 20 சதவீதமாகும். சதவீதத்தின் அடிப்படையில் திருச்சியில் 18 கொலை வழக்குகளில் 4 கொலை வழக்குகளில் சிறார்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர், ஏறக்குறைய 22.2 சதவீதமாகும்.

கடந்த ஆண்டு முக்கிய நகரங்களில் பதிவான கொலை வழக்குகளில் சிறார்கள் சதவீதம்

சென்னையில் 150 கொலைக் குற்றங்களில் 16 கொலை வழக்கில் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இது 10.7 சதவீதமாகும். அடுத்தபடியாக திருவள்ளூரில் 43 கொலைக் குற்றங்களில் 8 வழக்குகளில் சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இது 18.6 சதவீதமாகும்.

100 சதவீதம் அதிகரிப்பு

2020-ம் ஆண்டு என்சிஆர்பி அறிக்கையின்படி, குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் சதவீதம் 16.4 ஆக இருக்கிறது. தேசிய அளவில் தமிழகம் இதில் 4-வது இடத்தில் இருப்பது கவலைக்குரியதாகும். 18 வயதுக்குக் கீழுள்ள சிறார்கள் ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான கணக்கீட்டில் தமிழகத்தில் 16% ஆக இருக்கிறது.

2016-ம் ஆண்டில் 48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் ஈடுபட்ட நிலையில் இது 2020-ம் ஆண்டில் 100 சதவீதம் அதிகரித்து 104 கொலைக்குற்றங்களாக அதிகரித்துள்ளன.

சமூக விரோதிகள் கைகளில் குழந்தைகள்

தமிழக குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் கூறுகையில், “சமூக விரோத சக்திகள் குழந்தைகளைக் குறிவைத்து சுரண்டலில் ஈடுபடுவது இதில் தெளிவாகிறது. மொபைல் வாங்கவும், பைக் வாங்கவும், அன்றாடத் தேவைகளை நிறைவேற்றவும் வயதுவந்த சிறார்கள் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ஆனால் கொலைக் குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் அளவு அதிகரித்திருப்பது கவலைக்குரியது.

சிறார்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு சிறார் நீதியின் கீழ் தண்டனை வழங்கப்படும், ஆனால், ஐபிசியோடு ஒப்பிடுகையில் சிறார் சட்டத்தின் தண்டனை வலுவிழந்ததுதான்” எனத் தெரிவித்தார்.

கல்வி இடைநிற்றல்

குழந்தைகள் உரிமை ஆலோசகர், சிறார் நீதி வாரியத்தின் முன்னாள் உறுப்பினரான கிரிஜா குமார்பாபு கூறுகையில், “குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைநிற்றலை அதிகமாகக் கண்காணிக்க வேண்டும். 9-ம் வகுப்பில் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும் என்பதால், அதற்கு பயந்து, பல மாணவர்கள் 8-ம் வகுப்பிலேயே படிப்பைக் கைவிடுகிறார்கள்.

இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள். ஆனால் சிறார்கள் ஈடுபட்ட பதிவு செய்யப்படாத வழக்குகளும் உள்ளன. வயதானவர்களின் கரங்களில் சிறார்கள் சிக்கி, சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். போதைப் பழக்கத்தின் தாக்கம் இல்லாமல் பெரும்பாலான குழந்தைகள் குற்றங்களிலோ அல்லது கொலைக் குற்றங்களிலோ ஈடுபடமாட்டார்கள். சிறார்களுக்கு போதைப் பொருட்கள் கிடைப்பதைத் தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கிராமங்களில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நகரங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் தற்போது `நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், வடிகால்கள், சாலைகள், கட்டிடங்களை அமைத்தல், பராமரித்தல், நீர்நிலைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்கள், இதர மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

முழுமையாக தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வேலைதேடுவோர் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணியாளர் அட்டை வழங்கப்பட உள்ளது.

பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் பணி வழங்கப்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம், அவர்களது பணிகளின் அடிப்படையில் வழங்கப்படும். பணியாளர்களுக்கான குறைதீர் அமைப்பும் உருவாக்கப்படும்.

பதிவு சய்வது எப்படி?

இந்த திட்டத்தில் பதிவு செய்ய, 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு விண்ணப்பிக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, உரிய அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டு திட்டம் தயாரித்து,இயற்கை வள மேலாண்மை, வெள்ளத் தடுப்பு மற்றும் இதர பணிகள் என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும்.இதைக் கண்காணிக்க மாநிலஅளவிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்துக்கான நிதியில் 85 சதவீதம் நிதிநிலை அறிக்கை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கிறது: நாடாளுமன்றத்தில் பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கும் திமுக

மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக அதிகரிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுக்கிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் 3-வது பெரிய கட்சியாக இருந்தது. அக்கட்சிக்கு மக்களவையில் 22,மாநிலங்களவையில் 11 என்று33 எம்.பி.க்கள் இருந்தனர். மக்களவையில் 24, மாநிலங்களவையில் 7 என்று 31 எம்.பி.க்களுடன் 4-வது பெரிய கட்சியாக திமுக இருந்தது.

இந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் முகமத்ஜான் மறைவு,கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ராஜினாமாவால் தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாகின. முகமத்ஜான் மறைவால் காலியான இடத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்ட எம்.எம்.அப்துல்லா கடந்த 3-ம் தேதிபோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ராஜினாமாவால் காலியான இடங்களுக்கு திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள டாக்டர் கனிமொழி, கேஆர்என் ராஜேஸ்குமார் ஆகியஇருவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதனால், மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக அதிகரிக்கிறது. மக்களவையில் திமுகவுக்கு 24 எம்.பி.க்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் திமுகவின் பலம் 34 ஆக உயர்கிறது. இதன்மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுக்கிறது.

தற்போது மக்களவையில் 301, மாநிலங்களவையில் 94 என்று 395 எம்.பி.க்களுடன் பாஜக முதலிடத்திலும், மக்களவையில் 52, மாநிலங்களவையில் 33 என்று 85 எம்.பி.க்களுடன் காங்கிரஸ் 2-வது இடத்திலும் உள்ளன.

திரிணமூல் கட்சியுடன் சம இடம்

மக்களவையில் 22, மாநிலங்களவையில் 12 என 34 எம்.பி.க்களுடன் திரிணமூல் காங்கிரஸ் 3-வது இடத்தில் இருக்கும் நிலையில், மக்களவையில் 24, மாநிலங்களவையில் 10 என 34 எம்.பி.க்களுடன் அதற்கு சமமான இடத்தை திமுக பிடிக்கிறது.

மக்களவையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை உள்ளதால் மற்ற கட்சிகளால் நெருக்கடி கொடுக்க முடியாது. ஆனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் உதவியை பாஜக பெற்று வந்தது. குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்கள் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்களையும் இக்கட்சிகளின் ஆதரவுடன்தான் பாஜக அரசு நிறைவேற்றியது.

சிந்தாந்த அடிப்படையில் பாஜகவுக்கு நேர் எதிரான கட்சியான திமுக, அனைத்து விஷயங்களிலும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வரும் நிலையில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறிப்பிடத் தக்கது.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் கே.என் நேரு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், “2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவிகிதமாகும். 2021ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும், அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்யவும் தொடர்ந்து கோரிக்கைகள் வந்த கொண்டிருக்கின்றன.

அந்த கோரிக்கையின்படி தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

அதன்படி கடந்த 12ஆம் தேதி தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், தற்போது ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று (செப்டம்பர் 23) வெளியிட்டுள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை, நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம், கூடுவாஞ்சேரி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்கப் பணிகள், வரிமுறை மாற்றம், நகராட்சி ஆணையர் நியமனம் உள்ளிட்ட விதிகள் விரைவில் திருத்தி அமைக்கப்பட இருக்கிறது.

புதுவை மக்களுக்குக் குடிநீர் தர தனது மாளிகையை இடித்த ஆயி அம்மையாருக்குப் புதிதாக சிலை

தனது விருப்ப மாளிகையை இடித்து அங்கு மக்களுக்குக் குடிநீர் கிடைக்க குளம் அமைத்ததின் நினைவாக ராஜ்நிவாஸ்-சட்டப்பேரவை நடுவே உள்ள ஆயி மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு தற்போது அவரின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கும், சட்டப்பேரவைக்கும் எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அழகாய் அமைந்துள்ளது ஆயி மண்டபம். அத்துடன் இம்மண்டபம்தான் புதுச்சேரி அரசு சின்னம். இந்த மண்டபத்தின் பெயருடைய ஆயி என்பவர் தேவதாசி பெண். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

கடந்த 16-ம் நூற்றாண்டில் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேலூர் பயணத்தை முடித்துவிட்டு புதுவை உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரைப் பார்க்க வந்தார். அப்போது புதுச்சேரி முத்தரையர் பாளையத்தில் இருந்த மாளிகையைக் கோயில் என நினைத்து வணங்கினார். ஆனால், அருகில் இருந்தோர் இது தாசியின் வீடு என்றனர்.

இதையடுத்து அந்த மாளிகையை இடிக்க மன்னர் உத்தரவிட்டார். தான் ஆசையாகக் கட்டிய மாளிகையைத் தானே இடிப்பதாகவும், அதற்குக் கால அவகாசம் வேண்டுமென்றும் தேவதாசி ஆயி கேட்டார். அதை மன்னர் ஏற்றார். இதையடுத்து மாளிகையை ஆயி இடித்ததுடன், அந்த இடத்தில் தனது செல்வத்தைக் கொண்டு மக்களுக்காக குளத்தை ஆயி உருவாக்கினார். இந்தக் குளம் புதுவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக அமைந்தது.

அதன் பின்னர் 18-ம் நூற்றாண்டில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அப்போது தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க அப்போதைய ஆளுநர் போன்டெம்ப்ஸ், பிரான்சில் ஆட்சி செய்த அரசருக்குக் கடிதம் எழுதினார். அதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின் பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே புதுச்சேரி வந்தார்.

16-ம் நூற்றாண்டில் ஆயி வெட்டிய முத்தரையர் பாளையத்திலுள்ள இக்குளத்தில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். அதன் மூலம் புதுவை நகருக்குத் தண்ணீர் வந்தது. புதுவை தண்ணீர் பிரச்சினை தீர்ந்தது தொடர்பாகவும், பொறியாளரை கவுரவிக்க அனுமதி கேட்டும் ஆளுநர், மூன்றாம் நெப்போலியனுக்குக் கடிதம் எழுதினார்.

தாசி குலத்தில் பிறந்து தனது ஆசை மாளிகையை மன்னர் உத்தரவில் இடித்துவிட்டு மக்களுக்காக தனது இடத்தில் குளத்தினை வெட்டிய ஆயியின் சிறப்பை வியந்த மூன்றாம் நெப்போலியன் புதிய உத்தரவைப் பிறப்பித்தார். அதனால் 18-ம் நூற்றாண்டில் உருவானது ஆயி மண்டபம்.

கிரேக்க-ரோமானியக் கட்டிடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்தது ஆயி மண்டபம். பிற்காலத்தில் ஆயி மண்டபத்தைச் சுற்றி பாரதி பூங்கா அமைந்தது.

இந்தோ – பிரெஞ்சு உறவின் ஒரு முதன்மையான அடையாளமாகத் திகழும் இக்கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. தற்போது ஆயிக்குப் புதிதாக சிலையும் மண்டபத்தில் வைத்துள்ளனர். அருகே ஆயி அம்மையார் எனப் பெயர் பலகையையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவளம், புதுவை ஈடன் கடற்கரைகளுக்கு உலகப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ்

தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு உலகப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது.

சிறந்த, சுற்றுச்சூழல் மிக்க, கடல்சார் சூழலியைப் பேணிக் காக்கும் அழகிய கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

முன்னதாக, இந்தியா முழுவதும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் அந்தமான் நிகோபர், டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 8 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழைப் பெற்றிருந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு, உலகப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர், தற்போது இந்தியாவில் 10 சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரைகள் உள்ளன. இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவுக்கான பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழா: பங்கேற்க மதுரை வந்த காந்தியின் பேத்தி

காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழாவில் பங்கேற்க காந்தியின் பேத்தி இன்று மதுரை வந்தார்.

கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்தி கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு காந்தியின் பெருமைகளைப் போற்றும் வகையிலும், அவர் விட்டுச் சென்ற பணிகளையும், கொள்கைகளையும் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவதற்காக நாடு முழுவதும் மதுரை, மும்பை, டெல்லி, பாட்னா, கல்கத்தா, அகமதாபாத், வார்தா ஆகிய ஏழு இடங்களில் நினைவு காந்தி அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. இதில் மதுரை அருங்காட்சியத்திற்கு மற்ற அருங்காட்சியகங்களை விடப் பல்வேறு பெருமைகள் உண்டு.

தென் இந்தியா முழுமைக்குமாக 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது என்ற பெருமை கொண்டது. மேலும், காந்தியை கோட்சே சுட்டபோது காந்தியடிகள் தன் உடலில் அணிந்திருந்த ஆடையானது காந்தி அருங்காட்சியகத்திற்குத்தான் கொண்டு வரப்பட்டது. ரத்தக் கறை படிந்த காந்தியடிகளின் இறுதி உடை ஏன் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதற்கான காரணமும், மதுரைக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

கடந்த 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும் மேலாடை அணியக் கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததைக் கண்டு மனம் வருந்தினார். மேலும் அவர், தன் நாட்டு மக்களின் அன்றைய நிலையைக் கண்டு நாடு முழுமைக்கும் என்றைக்குத் தம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ அன்று வரை தானும் மேலாடை அணிவதில்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உறுதிமொழியை செப்டம்பர் 22-ல் எடுத்தார். இந்த நிகழ்வு அண்ணல் காந்தியடிகளின் ஆடைப்புரட்சி என்று குறிப்பிடப்படுகின்றது. அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் எளிய கதர் ஆடைகளைத்தான் காந்தி அணிந்தார்.

சுதந்திர போராட்டக் காலகட்டத்தில் அவரது அடையாளமாகவும், எளிமையாகவும் அந்த ஆடைகள் பார்க்கப்பட்டன. இந்த ‘ஆடைப்புரட்சி’ உறுதிமாழி நிகழ்வு ஏற்பட்டு நாளையுடன் (செப்டம்பர் 22ஆம் தேதி) ஒரு நூற்றாண்டு ஆகிறது. இந்த ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் ஒருங்கிணைப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து காந்திய நிறுவனங்களும் இணைந்து கொண்டாட உள்ளன.

காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நடைபெற்ற 251-ஏ, மேலமாசி வீதியில் ஆடைப்புரட்சியை நினைவு கூறும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக காந்தியடிகள் மற்றும் ராஜாஜியின் பேத்தியான தாரா காந்தி பட்டாச்சார்யா, இன்று மாலை மதுரை காந்தி அருங்காட்சியத்திற்கு வந்தார். அவரை காந்தி அருங்காட்சியக நிர்வாகிகள் வரவேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழி, கீறல் குறியீடுகள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கள், கீறல் குறியீடுகள் கண்டெ டுக்கப்பட்டன. இப்பகுதியை கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான முனைவர் ந.ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: முனைவென்றி என்பது கொடுமணலுக்கு இணையான ஊர். இங்குள்ள வயல்வெளி, கொழஞ்சித் திடல், ஆவடியாத்தாள் கண்மாய் பகுதிகளில் 100 ஏக்கரில் பெருங்கற்கால தொல்சான்றுகள் பரவிக் கிடக்கின்றன.

இங்கு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழிகள், கருப்பு, சிவப்புநிறப் பானை ஓடுகள், கீறல் குறியீடுகள், செங்கல் வட்டு சில்கள்,

சிறிய கலயங்கள், கற் கருவிகள், மனித எலும்புகள் காணப்படுகின்றன. இந்த தொல்பொருட்களை ஆய்வு செய்ததில், அவை 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி, சிவகளை அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் பல இங்கும் காணப்படுகின்றன.

இப்பகுதியை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வுசெய்தால் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கும். இதன்

மூலம் தமிழனின் பெருமையை உலகறியச் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

400 ஆண்டு பழமையான சதிக்கல்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம்தோண்டியபோது சுமார் 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த வரலாற்றுத்துறை உதவிபேராசிரியர் செ.ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன

தலைவர் வே.ராஜகுருவுக்குத் தகவல் தெரிவித்தார்.

இச்சிற்பத்தை ஆய்வுசெய்த தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:

இந்தச் சிற்பம் உடன் கட்டைஏறி உயிரை மாய்த்துக் கொண்டபெண்ணுக்கு வைத்த சதிக்கல்ஆகும். பழங்காலத்தில் போரிலோ, வேறு காரணத்தாலோ கணவர் உயிரிழந்தால், அவருடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி உயிர்துறந்த பெண்களுக்கு நினைவுச் சின்னம் அமைத்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.

இவற்றை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக்கிறார்கள். சதி, மாலை ஆகிய

சொற்களுக்கு பெண் என்றும்பொருள் உண்டு. இந்நிலையில் புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டது. இச்சதிக்கல் அமைப்பைக் கொண்டு பார்க்கும்போது, இது கி.பி.17-ம்நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர முடியாது: நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் புள்ளிவிவரத்துடன் தகவல்

தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளை ஆராய முன்னாள் நீதிபதிஏ.கே.ராஜன் தலைமையில் சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை தமிழக அரசுஅமைத்தது. அந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்துபுள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்தனர். நீட் தேர்வின்தாக்கம் குறித்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை பெற்றனர்.அந்த வகையில், சுமார் 85 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினிடம் 165 பக்க அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் கடந்த ஜூலை 14-ம் தேதிசமர்ப்பித்தனர்.

இந்நிலையில், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள், பரிந்துரைகள் வருமாறு:

கட்டமைப்பு பாதிக்கப்படும்

l மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்னும் ஒருசிலஆண்டுகள் தொடர்ந்து நடந்தால், தமிழக சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவர்கள் பற்றாக்குறைஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். கிராமப்புற,நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்குமுந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம். சுகாதார கட்டமைப்புதரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் நிலையும் ஏற்படலாம்.

l நீட் தேர்வை நீக்குவதற்கானசட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ளலாம்.

l இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவபல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள மருத்துவஇடங்கள் மருத்துவ கவுன்சிலின்சட்டதிட்டப்படிதான் நிரப்பப்பட வேண்டும் என்று சட்ட விதிகள்,அரசியல் சட்டக் கூறுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

l 2007-ல் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல,நீட் தேர்வை ரத்துசெய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம்.

l சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என நாடு முழுவதும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், பாடங்கள், கற்பித்தல், தேர்வு மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் குடும்ப நிலை, சமூக, பொருளாதார நிலை, படித்த பள்ளிகள் விவரம் போன்றவையும்,நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நிலையும் இந்த அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.