நடப்பு நிகழ்வுகள் – இந்தியா

 

100 சதவீதம் சூரிய மின்சக்தி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சாதனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் 100 சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தியை பெருக்குவது இலக்காக கொண்டு அதற்கா நடவடிக்கையை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையத்தில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சூரிய மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய தகடுகள் மூலம் 100 சதவீத மின் ஆற்றல் தேவை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மூலம் தினமும் 6,000 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், இந்த ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையம், நிர்வாக அலுலகம், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய விமானப் படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமனம்

இந்திய விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி விமானப் படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
விவேக் ராம் சவுத்ரி தற்போது விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ளார். மிக்-29 ரக போர் விமானங்களை இயக்குவதில் வல்லவரான இவர் கிட்டத்தட்ட 39 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற சவுத்ரி 1982 டிசம்பரில் இந்திய விமானப் படையில் போர் விமானியாக சேர்ந்தார். 3,800 மணி நேரத்துக்கு மேல் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், மிக்-21, மிக்-23 எம்எப், மிக் 29, சுகோய் 30 எம்கேஐ உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கியுள்ளார். விமானப் படை தளபதியாக சவுத்ரி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேற்குப் பிரிவு தலைமை கமாண்டராக உள்ள ஏர் மார்ஷல் பி.ஆர்.கிருஷ்ணா, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் புதிய தலைவராக பதவியேற்க உள்ளார்.

பிரதம மந்திரி டிஜிட்டல் சுகாதார இயக்கம்: வரும் 27-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

நாடு தழுவிய பிரதம மந்திரி டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இதுகுறித்து மாண்டவியா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் ‘தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம்’ என்ற புதிய பிரச்சாரம் தொடங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் மருத்துவரிடம் அல்லது மருந்து கடைக்கு செல்லும் போது, உங்கள் உடல்நிலை, அதற்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சை மற்றும் மருந்து தொடர்பான விவரம் சுகாதார அட்டையில் பதிவாகும். மருத்துவரிடம் சந்திப்புக்கான நேரம் பெறுவது முதல் சிகிச்சை பெறுவது வரை அனைத்தும் அந்த அட்டையில் இடம்பெறும்” என்று கூறியுள்ளார்.

நோயாளிகள் டெலிமெடிசின் மூலமும் சிகிச்சைக்கான ஆலோ சனைகள் பெறவும் இ-பார்மசி மூலம் மருந்துகளை பெறவும் இந்த அட்டை பயன்படும்.

இத்திட்டம் புதுச்சேரி, சண்டிகர், லடாக், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன், டையூ, தாத்ரா மற்றும் ஹாவேலியில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் இத்திட்டத்தை நாடு முழுவதிலும் பிரதமர் மோடி 27-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

ஆயுஷ்மான் திட்டம் வெற்றி

மத்திய அரசின் முன்னோடித் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்’ கடந்த 2018, செப்டம்பர் 23-ல் தொடங்கப்பட்டது. 10.74 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு (54 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள்) ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மூலம் ரூ.26,400 கோடி மதிப்புள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து: கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிப்பு

வரதட்சணை வாங்கமாட்டோம் என உறுதி கொடுத்தால் மட்டுமே இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த உறுதிமொழியை மீறினால் பட்டத்தைத் திரும்பப் பெறலாம் என்று மாணவரிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது.

இதுகுறித்துக் கோழிக்கோடு பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்குச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”கேரளாவில் அண்மையில் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட குடும்ப வன்முறையால் மரணங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்ததை அடுத்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார். அதன்படி, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கல்வி நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.

இதற்காகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களிடமும், பெற்றோரிடமும் உறுதிமொழிப் படிவத்தைப் பெறவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அந்தப் படிவத்தில் ஒவ்வொரு மாணவரும், பெற்றோரும், கல்லூரியில் சேரும்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.

2021-22ஆம் கல்வி ஆண்டில் ஏற்கெனவே சேர்ந்துள்ள மாணவர்களிடமும் இந்த உறுதிமொழிப் படிவத்தைப் பெற வேண்டியது அவசியம். இந்த உத்தரவு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்”.

இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாணவர் உறுதிமொழிப் படிவத்தில், உறுதிமொழியை மீறி நான் வரதட்சணை வாங்கினால் எனது பட்டத்தைத் திரும்பப் பெறலாம், பட்டமே அளிக்காமல் இருக்கலாம், மாணவர் சேர்க்கையை ரத்து செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நியமனம்

இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதூரியாவின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அடுத்த தளபதியாக வி.ஆர்.சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மிக் 29 ரக விமானத்தை இயக்குவதில் தேர்ந்த முன்னோடி. ஆகஸ்ட் 1, 2020 தொடங்கி, இவர் மேற்கு ஏர் கமாண்ட் தலைவராக இருக்கிறார்.

இவருடைய பணிக்காலத்தில் 3800 மணி நேரம் விமானப் பயண அனுபவம் கொண்டுள்ளார். இந்நிலையில், இந்திய விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரபூர்வ ட்விட்டரில் முதன்மை செய்தித் தொடர்பாளர் பரத் பூஷன், “இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரியை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போதைய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதூரியாவின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் பொது கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் நியமனம்

பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் புதிய பொதுக் கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் உபர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியுமான ராஜீவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பேஸ்புக் இந்தியாவின் புதிய பொதுக் கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் அகர்வால், பயனாளர்களின் பாதுகாப்பு,தரவு பாதுகாப்பு, தனியுரிமை, இணைய நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கைகளை வரையறுத்து பேஸ்புக் நிறுவனத்தின் மேம்பாட்டு முயற்சிகளை வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ராஜீவ் அகர்வால், பேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகனிடம் அறிக்கை அளிப்பார் என்றும், இந்திய தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் இருப்பார் என்றும் கூறியுள்ளது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் அகர்வால் இந்திய நிர்வாகப் பணியில் 26 வருட அனுபவம் உள்ளவர். இந்தக் காலத்தில் தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளராக இருந்து இந்தியாவின் முதல் அறிவுசார் சொத்து காப்புரிமை தொடர்பான தேசிய கொள்கையைக் கொண்டு வந்தவர் ஆவார். – பிடிஐ